Published : 17 Jan 2015 09:56 AM
Last Updated : 17 Jan 2015 09:56 AM

சென்னை புத்தகக் காட்சியில் 6 நூல்கள் வெளியீடு: சிங்கப்பூர் எழுத்தாளர்கள், நூல்கள் தமிழகத்தில் அறிமுகம்-பதிப்பக உரிமையாளர் தகவல்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாக, சிங்கப்பூரின் 4 பெண் எழுத்தாளர்களின் நூல்கள் சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கேயே வாழ்ந்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் பல்வேறு இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வருகின் றனர். அவர்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாக, சென்னை புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் 4 பேரின் 6 நூல்கள் வெளியிடப்பட்டன. இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பதிப்பாளர் பாலு மணிமாறன் பேசியதாவது:

தமிழகத்துக்கும் சிங்கப்பூருக் கும் ஆரம்ப காலம் முதலே நெருக்கமான நட்பும், தொடர்பும் இருந்துவருகிறது. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழர்கள் அனைத்து துறைகளி லும் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ் ணன், ஜெயமோகன், கவிஞர் முத்துக்குமார் ஆகியோரை அழைத்து இலக்கியச் சந்திப்பு களை சிங்கப்பூரில் நடத்தினோம். அதன் பயனாக, சமீப காலங்களில் இலக்கியத் துறையிலும் தமிழர்கள் நல்ல பல படைப்புகளைத் தந்துள்ளனர். ஆனால், அவை தமிழ் வாசகர்கள் இடையே போதிய கவனிப்பைப் பெறவில்லை.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் களின் படைப்புகள் தமிழகத்தில் பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், சிங்கப்பூர் அரசின் தேசியக் கலை மன்றத்தின் உதவியோடு, சிங்கப்பூரின் மூத்த தமிழ்ப் படைப்பாளி நூர்ஜஹான் சுலைமானின் ‘தையல் மிஷின்’, ரம்யா நாகேஸ்வரனின் ‘அகம்’, சூரியரெத்தினா எழுதிய ‘நான்’ மற்றும் ‘ஆ’, கமலாதேவி அரவிந்தன் எழுதிய ‘நிகழ்கலையில் நான்’ மற்றும் ‘கருவு’ ஆகிய 6 நூல்களை வெளியிடுகிறோம்.

சீனம், மலாய், தமிழ் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளுக்கும் சிங்கப்பூர் அரசு சம மதிப்பு வழங்கிவருகிறது. சிங்கப்பூரில் தமிழர்கள் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவு என்றபோதிலும், தமிழர்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஏராளமான உதவிகளை சிங்கப்பூர் அரசு செய்துவருகிறது. சிங்கப்பூரில் 30-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப் புகள் தொடர்ந்து செயல்பட்டு இலக்கிய விழாக்களை நடத்தி வருகின்றன. இவ்வாறு பதிப்பாளர் பாலு மணிமாறன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x