Last Updated : 07 Oct, 2014 08:11 AM

 

Published : 07 Oct 2014 08:11 AM
Last Updated : 07 Oct 2014 08:11 AM

பெங்களூரில் பலத்த பாதுகாப்பு; 144 தடை உத்தரவு அமல் - ஜெ. ஜாமீன் மனு இன்று விசாரணை: மற்ற மூவரின் மனுவும் விசாரணைக்கு வருகிறது

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

இதையடுத்து பெங்களூ ரின் சில முக்கியப் பகுதி களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான‌ ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 27-ம் தேதி முதல் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீன் மனு

கடந்த 29-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 1-ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா, இவ்வழக்கை வழக்க மான நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இன்று விசாரணை

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மனுக்களும், நீதிபதி சந்திரசேகர் முன்பு 23-வது நீதிமன்ற ஹாலில் இன்று விசாரணைக்கு ஏற்கப்படுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாய் அறிவித்துள்ளார்.

இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ராம்ஜெத்மலானி மற்றும் பி.குமார், அமித் தேசாய், மணிசங்கர், அம்ஜத் பாஷா ஆகியோரும் அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகிய வழக்கறிஞர்களும் ஆஜராகிறார்கள்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறி ஞர்கள் பாலாஜி சிங்கும், நடேசனும் ஆஜராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெ.வின் உடல்நிலை கருத்தில் கொள்ளப்படுமா?

''ஜெயலலிதாவுக்கு 66 வயதாகிறது. நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது உடல்நிலை குன்றியுள்ளது. ஒரு பெண் என்ற வகையில் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவருக்கு தீவிர மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா சட்டத்திற்கு விரோதமாக செயல்பட மாட்டார்'' என்ற வாதத்தை முன்வைக்க இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்,''ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக‌ இருக்கிறார்.அவரை ஜாமீனில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பி செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது''என வாதிடப் போவதாக தெரிவித்தார்.

இன்று விசாரணைக்கு வருமா?

நால்வரின் ஜாமீன் மனு வரிசை எண் படி 73-வது வழக்காக வருவதால், இன்று விசாரணைக்கு வருமா என்பதே சந்தேகமாகியுள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மனுக்களை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறி ஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

144 தடை உத்தரவு

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறு வதால் பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தவும், ஊர்வலம் செல்வதற் கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, 'தி இந்து'விடம் கூறும்போது, ''ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட‌ அதிமுகவினர் பெங்களூருக்கு வரத் தொடங்கியுள்ளனர். எனவே, தமிழக எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தவும், அசம் பாவிதங்களை தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற வளா கத்தில் அனைவரும் தீவிர பரிசோத னைக்குப் பிறகே அனுமதிக்கப் படுவர். வ‌ழக்கறிஞர்கள் மற்றும் அதிமுகவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வளாகம்,விதான சவுதா வளாகம் மற்றும் சிறை அமைந்திருக்கும் பரப்பன அக்ரஹாரா ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பவானி சிங்கை திமுக எதிர்க்குமா?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், மேல் முறையீட்டு வழக்கிலும் அரசு வழக்கறிஞராக நீட்டிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கர்நாடக அரசும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினரும் பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்ட பவானி சிங் நியாயமாக நடந்து கொள்வாரா என்ற சந்தேகம் திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வழக்கறிஞராக பவானிசிங் தொடர்வதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x