Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

காஞ்சியில் விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் ஒரே மாதத்தில் ரூ.8.60 லட்சம் அபராதம்: போக்குவரத்து போலீஸார் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து போலீஸார் ஒரே மாதத்தில் ரூ.8.60 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர்.காஞ்சிபுரம் நகரப் பகுதியில், பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், பன்னாட்டு நிறுவனங்களின் வாகனங்கள் ஆகியவற்றால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க அரசு திட்டமிட்டது. எனினும், காஞ்சியின் தனி அடையாளமாக கருதப்படும் பாரம்பரியம் மிக்க வரதராஜபெருமாள் கோயில் தோரோட்டத்துக்கு இடையூறாக அமையும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் பல இடங்களில் ஒருவழிப்பாதைகள் அறிவிக்கப்பட்டன. அதற்கான தகவல் குறியீடுகள் அமைத்ததோடு, சாலைகளை கடக்கும் இடங்களிலும் வெள்ளை நிறப்பட்டைகளை போலீஸார் தீட்டினர். இவற்றை வாகன ஓட்டிகள் மதிக்காத நிலையில், விதிமீறலை கட்டுப்படுத்த காஞ்சி நகரில் போதிய போக்குவரத்து போலீஸார் இல்லை. 1972-ம் ஆண்டிலிருந்து ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 12 பிற போலீஸாருடன் தான் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் நிலையம் இயங்கி வந்தது.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற விஜயகுமாரின் கோரிக்கையை ஏற்று, காஞ்சி போக்குவரத்து காவல்நிலையத்துக்கு நிரந்தர ஆய்வாளரை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஒரு உதவி ஆய்வாளர், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளரையும் கூடுதலாக நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை எஸ்.பி. விஜயகுமார் முடுக்கிவிட்டார்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது: விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அதே பகுதியில் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்காக நவீன கருவியும் போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் வாகனப் பதிவு எண் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுநர் உரிம எண்ணை பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவாகிறது.

இதனால் ஒரே நபர் தொடர்ந்து விதிமீறல் அபராதம் செலுத்தி இருந்தாலும், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதியில் செலுத்தியிருந்தாலும், எத்தனை முறை விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிந்துவிடும். 3-வது முறையாக விதி மீறலில் ஈடுபடுவோருக்கு வழக்கமான அபராதத்தை விட பன்மடங்கு அபராதம் வசூலிக்கப்பட இருக்கிறது. நவீன கருவியாலேயே இது சாத்தியமாகிறது. நோட்டில் எழுதி அபராதம் விதிக்கும் பழைய நடைமுறையில், வெளியூரில் விதிமீறல் அபராதம் செலுத்தியிருந்தால் கண்டுபிடிக்க முடியாது.

கடந்த ஜூன் மாதம் ரூ.4 லட்சமாக இருந்த விதிமீறல் அபராதம், போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு ஒரே மாதத்தில் ரூ.8.60 லட்சமாக உயர்ந்துள்ளது. முன்பு சாலையை கடப்போர் மனம் போன போக்கில் சாலையை கடந்தனர். தற்போது வெள்ளை நிற பட்டை தீட்டப்பட்ட பகுதியில் மட்டும் சாலையை கடக்க பொதுமக்களை போலீஸார் அறிவுறுத்துகின்றனர். நகரத்தின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் மூலமும் போக்குவரத்தை போலீஸார் கண்காணிக்கின்றனர் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x