Published : 20 Aug 2014 08:37 AM
Last Updated : 20 Aug 2014 08:37 AM

மனைவி, காதலன் தலைகளை வெட்டி 18 கி.மீ. காவடிபோல் சுமந்து சென்ற கணவன்

மனைவி தனக்கு துரோகம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியாத விவசாயி, மனைவி மற்றும் அவரது காதலனின் தலைகளை வெட்டி 18 கி.மீட்டர் தொலைவு காவடி போல் சுமந்து சென்று போலீஸில் சரணடைந்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் மாவட்டம், ஹுக்கும் பேட்டை மண்டலம், கொப்புல பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குண்டண்ணா (40). இவரது மனைவி ஜானகி (33). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஜானகி, உறவு முறையில் மைத்துனரான நாராயணா (38) என்பவருடன் தகாத தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக குண்டண்ணா, தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ஜானகி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு கொர்லகூடம் பகுதியில் உள்ள தனது காதலன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த குண்டண்ணா, தனது மனைவி மற்றும் அவரது காதலன் இருவரையும் கொலை செய்வதென முடிவு செய்தார்.

திங்கள்கிழமை விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாராயணாவை வெட்டி கொலை செய்த குண்டண்ணா, அவரது தலையைத் துண்டித்து ஒரு மஞ்சள் பையில் போட்டு கொண்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள நாராயணாவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த தனது மனைவி ஜானகியையும் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவரது தலையையும் தனியாக வெட்டி மற்றொரு மஞ்சள் பையில் போட்டு இரண்டு தலைகளையும் ஒரு கொம்பில் காவடி போல் முன்னும் பின்னுமாக மாட்டினார். பின்னர் அங்கிருந்து 18 கி.மீட்டர் தூரம் வரை இரு தலைகளையும் தனது தோளில் சுமந்தபடி நடந்துச் சென்று பாடேரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இது குறித்து பாடேரு போலீஸார் வழக்கு பதிந்து குண்டண்ணாவை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x