Published : 06 Aug 2014 06:42 PM
Last Updated : 06 Aug 2014 06:42 PM

ஆஸி.யில் ரயில் - நடைமேடை இடையே சிக்கிய பயணியின் கால்: மக்கள் சக்தியால் பத்திரமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் நடைமேடைக்கு நடுவே சிக்கிய பயணி ஒருவரின் கால், பயணிகளின் முயற்சியால் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சிரியமடைய செய்துள்ளது. (வீடியோ பதிவு கீழே)

ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் உள்ள ஸ்டெர்லிங் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல பயணிகள் அனைவரும் தங்களுது பணிகளுக்கு செல்வற்காக வந்து கூடினர். ரயில் மேடைக்கு 8.50 மணி அளவில் வழக்கம் போல பயணிகள் ரயில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த போது, பயணி ஒருவரின் கால் ரயிலுக்கும் நடைமேடைக்கு நடுவே மாட்டிக்கொண்டது.

இதனை அடுத்து, ரயில்வே நிரவாகத்திடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு, ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் உதவி செய்தும், மாட்டியே காலை வெளியே எடுக்க முடியவில்லை. தொடர் முயற்சியால், பயணியின் கால் மேலும் முட்டி அளவு உள்ளே சென்றது.

இதனால், கால் மாட்டிய பயணி மிகவும் சோர்வடைந்து பயத்துக்கு உள்ளானார். இதனை அடுத்து அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரயிலை தூக்க முடிவு செய்தனர். பலர் ரயிலை தூக்கியும் சற்றும் அசைக்க முடியவில்லை.

பின்னர், ரயிலின் உள்ளே மற்றும் நடைமேடை ஆகிய இடங்களில் இருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த ரயிலை ஒரே மூச்சில் இழுத்தனர். ரயில் ஒரு பக்கமாக சற்று சாய்ந்தது, மாட்டிய காலை அந்த பயணி பத்திரமாக வெளியே இழுத்தார்.

இது குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் க்ளெய்ர் க்ரால் கூறும்போது, "இது போன்ற ஒரு சம்பவத்தை நான் இதுவரை கண்டதும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்ததால், பயணியை லேசான காயத்துடன் மீட்க முடிந்தது. இது தான் கூட்டு முயற்சி வெற்றி பெறும் என்பார்கள் போல!. ரயிலையும் சரியான நேரத்தில் டிரைவரிடம் கூறி நிறுத்தி வைத்தோம்" என்றார்.

இந்த சம்பவம் பதிவான வீடியோ யூடியூபில் தற்போது பலராலும் கண்டு பகிரப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x