Published : 21 Aug 2014 06:22 PM
Last Updated : 21 Aug 2014 06:22 PM

கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து தப்பித்த நைஜீரிய பள்ளி மாணவிகளுக்கு உதவ ஐ.நா. தீவிரம்

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போகோ ஹராம் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பித்த பள்ளி மாணவிகளுக்கு உதவும் பணியில் ஐ.நா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 200 மாணவிகளில் பலரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட மாணவிகள், அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் நைஜீரியா பிரதிநிதியான ரதி நவ்லோவு பேசுகையில், “சிபோக் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிமாணவிகள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பி, தங்களது வீட்டிற்குச் செல்லும் வழியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியில் சந்தித்த சில ஆண்கள், அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, தூக்கி வீசினர்”, என்று தெரிவித்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், “அப்பெண்களிடம் மாதவிடாயின் போது பயன்படுத்தபடும் சானிடரி நாப்கின்கள் இல்லை. அவர்களுக்குத் தண்ணீரும் தேவைப்படுகிறது. ஒரு பெண் கண்ணியமாக இருக்கவேண்டிய எந்தவொரு அடிப்படை வசதிகளும் அவர்களிடம் இல்லை”, என்று குறிப்பிட்டார்.

ஐ.நா அவர்களுக்கு சானிடரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ’கண்ணியப் பை’யை வழங்கினர்.

இந்த அமைப்பு, சிறுமிகளுக்கு பாலியல் கல்வி குறித்துக் கற்பிக்கவும் ஏற்பாடு செய்தது. ஊருக்கு திரும்பும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை அமைப்பது குறித்து, சிபோக் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள சிபோக் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 270 சிறுமிகள் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x