Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிகவில் 70% பேர் ஆதரவு- விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் முடிந்தது

தேமுதிக விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் புதன்கிழமை நிறைவடைந்தது. கூட்டணி தொடர்பான தேர்தல் குழுவின் கேள்விகளுக்கு, 70 சதவீதம் பேர் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேமுதிக சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான மனுக்கள் தாக்கல் செய்வது, கடந்த வாரத்துடன் முடிந்த நிலையில், கடந்த 9, 10,11 மற்றும் 12 ஆகிய நாட்களில், விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் நடந்தது.

மனுதாரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு, விஜயகாந்த், சுதீஷ் மற்றும் தேர்தல் குழு அடங்கிய குழுவால், நேர்காணல் நடத்தப்பட்டது. சுமார் 1,000 மனுக்களுக்கு மேல் தாக்கலாகின. இதில் 240க்கும் மேற்பட்ட மனுக்கள் வடசென்னை தொகுதிக்கு தாக்கலாகியுள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் விஜயகாந்த், சுதீஷ் மற்றும் பிரேமலதா போட்டியிட மனுக்கள் தாக்கலாகியுள்ளன.

இந்த நேர்காணலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானோர், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடி பிரதமராக வருவார் என்று பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தமிழகத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற உறுதி இல்லாததால், தேமுதிக மிகவும் அதிக முயற்சி எடுத்துதான் வெற்றி பெற முடியும் என்று விருப்ப மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக அல்லது காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி எண்ணிக்கை குறைந்தாலும், நிச்சயமாக சில இடங்களைக் கைப்பற்ற முடியும் என்ற கருத்து நிலவுவதாக தேமுதிக தலைமை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைக் கருத்தில் கொண்டுதான், காங்கிரஸ் மூலமாக தேமுதிக பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x