Last Updated : 09 Mar, 2015 07:34 PM

 

Published : 09 Mar 2015 07:34 PM
Last Updated : 09 Mar 2015 07:34 PM

மேற்கு வங்க மாநிலத்துக்கு உதவி: மம்தாவுக்கு மோடி உறுதி

மேற்கு வங்க மாநிலம், அதன் கடன் சுமையிலிருந்து வெளிவரவும், மாநில வளர்ச்சிக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பிரதமரான பிறகு மம்தா பானர்ஜி முதன் முறையாக டெல்லியில் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து மம்தா கூறும்போது, “மேற்கு வங்கத்தின் கடன் சுமை மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகமாக உள்ளது என்றார் பிரதமர். ஆனாலும் நிதி ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததற்காக மோடி பாராட்டு தெரிவித்தார். நிதி நிலமைகளைச் சீர் செய்வதற்கான எங்களது முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார்.

மத்திய அரசு தங்களால் இயன்றவரையிலான உதவிகளைச் செய்ய முயற்சி எடுக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார். ஏனெனில் நாடும் இப்போது நிதி நெருக்கடியில்தான் உள்ளது. இருந்தாலும் எந்த வகையில் உதவ முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று கூறினார் பிரதமர்.

இன்று எங்கள் கட்சி எம்.பி.க்களுடன் நான் பிரதமரைச் சந்தித்தேன். அவரிடம் மேற்கு வங்கத்தின் நிதிநிலைமைகளை விளக்கினோம். 2011ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், ஆனால் கடன் முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சியில் வாங்கப்பட்டது.

ஆர்.பி.ஐ.-இடமிருந்து சுமார் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கியது முந்தைய அரசு. இது எங்கள் தவறல்ல. கடன் சுமையினால் பெரும்பகுதி வருவாய் வட்டிக்குச் சென்று விடுகிறது, இதனால் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் கடன் நிவாரணம் கேட்டுள்ளோம்.

மத்திய அரசு மாநிலத்தின் அனைத்து நிதியையும் கொண்டு செல்கிறது. பின் எப்படி மாநிலம் வளர்ச்சியடையும், ஏழைகள் நலன் எப்படி காக்கப்பட முடியும்? சாலைக் கட்டுமானம், உணவுச் சேகரிப்பு, குறைந்தது 100 நாட்கள் வேலை... இவையெல்லாம் எப்படி சாத்தியம்?

கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரியுள்ளோம். இடதுசாரிகள் ஆட்சியில் நிதி ஒழுங்குமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வருவாய் அதிகரித்துள்ளது. ரூ.21,000 கோடியாக இருந்த வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளோம். ” என்றார் மம்தா பானர்ஜி.

இந்தச் சந்திப்பு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மேற்கு வங்கம் மற்றும் கொல்கத்தா வளர்ச்சியடைய வேண்டும், அதற்காக தனிப்பட்ட கொள்கையை வைத்திருக்கிறோம். இப்பகுதி மக்கள் திறமைசாலிகள், நிறைய வளங்கள் அங்கு உள்ளன. எனவே மேற்குவங்கம் மற்றும் கொல்கத்தாவின் வளர்ச்சிக்கு பிரதமர் கடமையுடையவராக இருப்பதாகத் தெரிவித்தார்.:” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x