Published : 18 Mar 2015 10:51 AM
Last Updated : 18 Mar 2015 10:51 AM

உகோ காலிறுதி: தென் ஆப்பிரிக்கா-இலங்கை போட்டி பதிவுகள்

இலங்கையை ஊதிய தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதியில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சிட்னியில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாக்-அவுட் சுற்றில் தன் முதல் வெற்றியைச் சுவைத்தது தென் ஆப்பிரிக்கா.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, தென் ஆப்பிரிக்காவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றுக்கு முன்னால் சரணடைந்து 133 ரன்களுக்கு உணவு இடைவேளைக்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த்து. ஜே.பி.டுமினி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட், இம்ரான் தாஹிர் என்று அனைவரும் மிகச்சிறப்பாக வீசினர்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆம்லா (16) விக்கெட்டை மட்டும் இழந்து 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 18 ஓவர்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஆம்லா விக்கெட்டை மலிங்கா கைப்பற்றினார். தேர்ட் மேன் திசையில் ஆம்லா தூக்கி அடிக்க அதனை மிக அருமையாக குலசேகரா கேட்ச் பிடித்தார்.

அதன் பிறகு குவிண்டன் டி காக் (78), டு பிளெஸ்ஸிஸ் (21) இணைந்து மேலும் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இலக்கை எட்டினர். முரளிதரனின் ‘டூப்ளிகேட்’ என்று டாஸ் போடும் போது கேப்டன் மேத்யூஸ் வர்ணித்த குஷால் என்ற ஆஃப் ஸ்பின்னருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

ஆம்லா ஆட்டமிழந்த பிறகு உணவு இடைவேளை தருணத்தில் தென் ஆப்பிரிக்கா 6.4 ஓவர்களில் 40/1 என்று இருந்தது. அதன் பிறகு டி காக் சில அருமையான பவுண்டரிகளை அடித்து 9 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிறகு 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழந்தார். டுபிளெஸ்ஸி 31 பந்துகளில் பவுண்டரி எதுவும் இல்லாமல் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

இருவரும் இணைந்து 11.2 ஓவர்களில் 94 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் மலிங்கா வீசிய பந்தை கவர் திசையில் பளார் பவுண்டரி அடித்தார் டி காக் அதுவே வெற்றி ரன்களாக அமைந்தது. தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

மிகவும் நெருக்கமான, கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் காலிறுதிப் போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் ஒன்றுமில்லாமல் போனது. நாக்-அவுட் சுற்றில் முதல் தடையை மிகவும் சுலபமாக தென் ஆப்பிரிக்கா தாண்டியுள்ளது. அடுத்து அரையிறுதியில் களமிறங்கும் போது தென் ஆப்பிரிக்க அணி நிச்சயம் பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கையை 133 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா

உலகக் கோப்பை முதல் காலிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 133 ரன்களில் தென் ஆப்பிரிக்கா சுருட்டியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, 37.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் என்ற சற்றே எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் அபாரப் பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்கள் ரன் சேர்க்க தவித்து பெவிலியன் திரும்பினர். சங்ககாரா 45 ரன்களும், திரிமன்னே 41 ரன்களும் சேர்த்தனர். மேத்யூஸ் 19 ரன்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கம் மட்டுமே.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், துமினியின் ஹாட்ரிக் விக்கெட்டுடன் இலங்கை பரிதாப நிலையில் பேட் செய்து வந்தது.

சங்ககாரா வெளியே... மழை உள்ளே...

முன்னதாக, 36.2-வது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து சங்ககாரா ஆட்டமிழந்தார். அவர் 45 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது மழை கொட்டத் தொடங்கியது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், மழை விட்டதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

துமினி ஹாட்ரிக் விக்கெட்:

ஆட்டத்தின் 30-வது ஓவர் கடைசி பந்தில் துமினி பந்துவீச்சில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார். அவர் டூபிளஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது, அவர் 19 ரன்கள் சேர்த்திருந்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய திசாரா பரேரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தாஹிர் பந்துவீச்சில் ரூசோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

பின்னர் களமிறங்கிய குலசேகராவும் சட்டென ஆட்டமிழந்தார். அவர் 34.1-வது ஓவரில் துமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குஷால், துமியின் ஹாட்ரிக் விக்கெட் ஆனார். ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

மோசமான துவக்கம்:

ஆட்டத்தில் 2-வது ஓவரிலேயே துவக்க வீரரான பெரேரா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் தில்ஷானும் அடுத்த இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த திரிமன்னே - சங்ககாரா இருவரும் அணியின் நிலையை சற்று உறுதியாக்கினர்.

அப்போது, ரன் சேர்க்க தடுமாறினாலும் விக்கெட் இழக்காமல் இருப்பதே முக்கியமாக இருந்தது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 35 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பந்துவீச்சில் இலங்கை ரன் சேர்ப்பை மேலும் நெருக்கிய தென் ஆப்பிரிக்க அணி, அதற்கு பலனாக 20-வது ஓவரில் திரிமன்னே விக்கெட்டை வீழ்த்தியது. அவர் 41 ரன்கள் சேர்த்திருந்தார்.

திரிமன்னே விக்கெட்டை வீழ்த்திய இம்ரான் தாஹிர், 24-வது ஓவரில் ஜெயவர்த்தனே விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கைக்கு அதிர்ச்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து இலங்கையின் கேப்டன் மேத்யூஸ், சங்ககாராவோடு இணைந்து, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த முயற்சி பெரிதாக கைகொடுக்கவில்லை.

இலங்கை ஸ்கோர்:

பரேரா - 3

தில்ஷான் - 0

சங்ககாரா - 45

திரிமன்னே - 41

ஜெயவர்தனே - 4

மேத்யூஸ் - 19

திசாரா பரேரா - 0

குலசேகரா - 1

கவுஷால் - 0

சமீரா (நாட் அவுட்) - 2

மலிங்கா - 3

37.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள்

தென் ஆப்பிரிக்க தரப்பில் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், துமினி 3 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் மற்றும் அபாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

*

சங்காவுக்கு மேலும் ஒரு சிறப்பு:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ரன்கள் எடுத்தபோது, ஓர் உலகக் கோப்பையில் 500 ரன்கள் எடுத்த 7-வது வீரர் என்ற என்ற பெருமையைப் பெற்றார் குமார் சங்ககாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x