Last Updated : 11 Feb, 2015 09:26 PM

 

Published : 11 Feb 2015 09:26 PM
Last Updated : 11 Feb 2015 09:26 PM

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜக மீதான முழுப் புறக்கணிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி, பாஜக-வை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர் என்பதை அறிவுறுத்துவதோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் நிராகரிப்பதாக அமைந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறும் போது, “டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற பிரம்மாண்டமான வெற்றி பாஜக-வின் மீதான, அதன் தலைவர் மோடியின் மீதான முற்றான நிராகரிப்பே ஆகும்.

பாஜக-வை மக்கள் புறக்கணிப்பதுடன், காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று வாய்ப்புகள் இருந்தால் அந்தக் கட்சியை மக்கள் வெற்றிபெறச் செய்கின்றனர் என்பதையும் டெல்லி தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.

நாட்டின் தலைநகரில் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முடிவு எதிர்காலத்தில் இந்தியா முழுதும் ஏற்படலாம். மேலும் சிறுபான்மையினர் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அளவில் வாக்களித்துள்ளனர்.

மேலும், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் மத அணுகுமுறைப் போக்குகளும் டெல்லி மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை.

ஆம் ஆத்மியின் அணுகுமுறை, மற்றும் புரிதல் எப்படி அமையும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

தேர்தல் கூட்டணியில் எங்களுக்கு ஆர்வமில்லை. ஆனால், மக்களுக்குத் தேவையான விவகாரங்களில் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x