Last Updated : 21 Jan, 2015 01:43 PM

 

Published : 21 Jan 2015 01:43 PM
Last Updated : 21 Jan 2015 01:43 PM

’ஷமிதாப் விழாவில் இளையராஜாவுக்கு ரஜினி, கமல், அமிதாப், தனுஷ் புகழாரம்

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததற்காக, இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாகவும் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.

இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இசை வெளியீட்டு விழா மேடையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவருமே இளையராஜாவின் இசைக்கும் தங்களுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இளையராஜா இசை குறித்து ரஜினிகாந்த் பேசும்போது, "எனக்கு இளையராஜாவை 70-களில் இருந்தே தெரியும். அவர் மிகவும் குறும்புத்தனத்தோடு பழகுவார். ஒரு காலத்தில் நாங்கள் இருவருமே விடிய விடிய மது அருந்தியபடி கதை பேசிக் கொண்டிருப்போம். திடீரென அவரது உடையமைப்பில் மாற்றம் ஏற்பட்டது எனக்கு ஆச்சர்யமளித்தது. அப்போதில் இருந்து அவரை ராஜா சாமி என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர் இப்போது ஞானியாக திகழ்கிறார். அவரிடத்தில் சரஸ்வதி தேவி குடியிருப்பதாக நினைக்கிறேன்" என்றார் ரஜினி.

இளையராஜா இசை குறித்து கமல்ஹாசன் பேசும்போது, "அவருடைய 1000 படங்களில் 10% சதவீத படங்கள் என்னுடையது. பாடல்களை வேண்டுமானால் அவர் இயற்றி இருக்கலாம், ஆனால் அந்தப் பாடல்கள் நமக்கு சொந்தமானவை. அவருடைய மாற்றத்திற்கு பிறகு அவரை எனது சகோதரராக அழைக்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இளையராஜா இசை குறித்து அமிதாப் பச்சன் பேசும்போது, "இளையராஜா இசை குறித்தும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றியும் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடைய பெயர் பல படங்களின் வியாபாரத்துக்கு உதவியிருக்கிறது. இசையுலகில் அவரது பெயர் கடவுளோடு ஒப்பிடப்படுகிறது" என்றார்.

இளையராஜா இசை குறித்து தனுஷ் பேசும்போது, "நான் ஒரு தேர்ந்த நடிகன் அல்ல. திரையுலகில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். இளையராஜா இசை இல்லாமல் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய இசையோடுதான் வாழ்கிறேன். ஒவ்வொரு காட்சியுமே உங்களுடைய இசை தான்.

ரஜினி சார் இந்த விழாவிற்கு வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதிரியான விழாவை இனிமேல் என்னுடைய திரையுலக வாழ்வில் எதிர்பார்க்க முடியாது" என்றார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x