Last Updated : 05 Jan, 2015 06:59 PM

 

Published : 05 Jan 2015 06:59 PM
Last Updated : 05 Jan 2015 06:59 PM

பாக். ராணுவம் தாக்குதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திங்கள்கிழமை இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் சர்வதேச எல்லைப் பகுதி முழுவதும் இந்திய எல்லைச் சாவடிகள் மீதும், பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

மதியம் 2 மணியளவில் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைப் பகுதியில் 3 முதல் 4 கி.மீ. தொலைவு வரை குண்டுகளை வீசினர். இதில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேவேந்திர குமார் உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது" என்றார் அவர்.

பொதுமக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதன் எதிரொலியாக, எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான பகுதி நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சம்பா மாவட்டத்தில் ஒரு இடத்திலும், கதுவா மாவட்டத்தில் 2 இடங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நள்ளிரவு முதல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் இருந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் சம்பா, கதுவா மாவட்டங்களில் எல்லையோர கிராமங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர்.

கதுவா மாவட்டத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த 2,500 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதில், 1,800 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வசதிகளை ராணுவம் செய்து வருகிறது.

எல்லையோரத்தில் உள்ள 57 கிராமங்களில் வசிக்கும் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் ஆபத்தான சூழலில் உள்ளனர். அவர்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பெண் பலியானார். சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தியாவின் பதில் தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்களும் ஒரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x