Last Updated : 03 Jan, 2015 11:59 AM

 

Published : 03 Jan 2015 11:59 AM
Last Updated : 03 Jan 2015 11:59 AM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: மேற்கிந்தியத்தீவுகள் 248/5

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி, 3-வது டெஸ்ட்போட்டியின் முதல் நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி 80 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பிராத்வெய்ட், ஸ்மித் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். இதனால் ரன் அதிகம் சேரவில்லை. 13.2 ஓவரில் ஸ்கோர் 30 ஆக இருந்தபோது ஸ்மித் 7 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரை தென்னாப்பிரிக்காவின் அறிமுக வீரர் ஹார்மர் ஆட்டமிழக்கச் செய்து, சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார்.

அடுத்து ஜான்சன் களமிறங்கினார். ஸ்கோர் 80 ஆக இருந்தபோது மேற்கிந்தியத்தீவுகள் 2-வது விக்கெட்டை இழந்தது. பிராத்வெய்ட் 47 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து ஜான்சனுடன், சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்த ஜான்சன் 54 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சாமுவேல்ஸ் 43 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அனுபவ வீரர் சந்தர்பால் அதிக நேரம் நீடிக்கவில்லை அவரை புதுமுக வீரர் ஹார்மர் 9 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து பிளாக்வுட் களமிறங்கினார். 80 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. பிளாக்வுட் 35 ரன்களுடனும், கேப்டன் ராம்தீன் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 3 விக்கெட்டுகளையும் ஸ்டெயின், வான் சுல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x