Published : 18 Jan 2015 02:41 PM
Last Updated : 18 Jan 2015 02:41 PM
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற ராஜபக்ச சூழ்ச்சி செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து அந்த நாட்டு போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் கடந்த 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்தத் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்தார். எனினும் நள்ளிரவில் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்றி ஆட்சியில் நீடிக்க முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய சம்மதிக்காததால் ராணுவம், போலீஸ் படையின் உதவியுடன் ஆட்சியை தக்கவைக்க ராஜபக்ச முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹனா கூறியபோது, முன்னாள் அதிபர் ராஜபக்ச மீதான புகார் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இதுதொடர் பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையையும் கேட்டிருக் கிறோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை சுதந்திர கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜபக்ச நேற்றுமுன்தினம் விலகினார். அந்த கட்சியின் புதிய தலைவராக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து ராஜபக்ச கூறியபோது, கட்சி உடைவதை நான் விரும்பவில்லை, அதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன், தேர்தலுக்குப் பிறகு எனது ஆதரவாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT