Published : 19 Jan 2015 12:15 PM
Last Updated : 19 Jan 2015 12:15 PM

தமிழகத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன? - அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கான்கிரீட் சாலைகள் அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டு, மீண்டும் தார் சாலைக்கு சென்னை மாநகராட்சி திரும்பிவிட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த 12-ம் தேதி செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டது. இதற்கு, தமிழக அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று உத்தரவிட்டனர்.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் கான்கிரீட் சாலைகள் அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலை என்ன என்பது பற்றியும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் டி.மோகனை நியமித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x