Published : 25 Oct 2014 11:44 AM
Last Updated : 25 Oct 2014 11:44 AM

ஐஎஸ் தீவிரவாதிகளின் ஜிகாத் பள்ளியில் கழுத்தை அறுக்கவும், சித்திரவதை செய்யவும் சிறுவர்களுக்கு பயிற்சி

சிரியா, இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் ஜிகாத் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இங்கு சிறுவர்களுக்கு கழுத்தை அறுக்கவும், சித்திரவதை செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜிகாத் பள்ளியில் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் விஷயங்கள் குறித்த வீடியோ, புகைப்படங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. இதில் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி இடம் பெற்றுள்ளது.

இப்பள்ளிகளில் 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் அதிகம் உள்ளனர். மனிதர்களின் கழுத்தை அறுப்பது, சித்திரவதை செய்வது போன்ற வீடியோ காட்சிகளை கட்டாயப்படுத்தி இவர்களை பார்க்கச் செய்கின்றனர். ஏகே-47 உள்பட பல்வேறு ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்தும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர மதபோதனை வகுப்புகளும் நடைபெறுகின்றன.

இஸ்லாமிய நாட்டின் சிங்கக் குட்டி என்ற பெயரிடப்பட்டுள்ள வீடியோவில், இச்சிறுவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எதிர்கால வாரிசுகள். எங்கள் குறிக்கோள்கள் உலகம் முழுவதும் நிலைநாட்ட தயாராகி வருகின்றனர் என்று அரபு மொழியில் கூறப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை ஐஎஸ் தீவிரவாதிகள் போருக்கு தயார்படுத்தி வருவது உறுதியாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகளின் தாக்குதல் உச்சமடையும் நேரத்தில் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக தீவிரவாதிகள் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிகிறது.

சிறுவர்களை போரில் ஈடுபடுத்தக் கூடாது என்ற ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடுமையாக வலியுறுத்தியுள்ள நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளை சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து அவற்றை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சிறார் உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x