Published : 28 Mar 2015 10:46 AM
Last Updated : 28 Mar 2015 10:46 AM

மாக்சிம் கார்க்கி 10

உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளரும் அரசியல்வாதியுமான மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) பிறந்த தினம் இன்று (மார்ச் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் (1868) பிறந்தார். இயற்பெயர் அலெக்ஸி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவருக்கு எல்லாமே பாட்டிதான். ‘பாட்டி கூறிய ராஜா, ராணி கதைகள்தான் எனக்கு அறிவுப் பாடம் புகட்டின’ என்று பெருமிதத்துடன் கூறுவார்.

* வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார்.

* எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.

* 1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ நாவல் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

* வலிமையான இவரது எழுத்துகள் சாதாரண மக்களை விழிப்படையச் செய்தன. இலக்கியவாதிகளின் பாராட்டுகளைப் பெற்றன. ஏழைகள் இவரைத் தங்கள் பிரதிநிதியாகக் கொண்டாடினர்.

* ரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டினார்.

* பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

* ரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகள் அறிந்தவர். உழைப்புதான் உலகின் ஜீவசக்தி என்பார். இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

* பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* இவரது எழுத்துகளின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. சோஷலிஸ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும் பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x