Published : 01 Dec 2014 09:00 AM
Last Updated : 01 Dec 2014 09:00 AM

அப்பீல் வழக்குக்கு வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் என்ன ஆனது?- மத்திய அரசிடம் திருப்பிக் கேட்க தமிழக மீன்வளத்துறை முடிவு

மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு செலவுக்கு அனுப்பப்பட்ட ரூ.20 லட்சத்தை மத்திய அரசிடம் திருப்பிக் கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இன்னும் இரு தினங்களில் கடிதம் எழுதப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2011-ல் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தல் பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மீனவ அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித் தனர். மீனவர்களை விடுதலை செய்யும் நோக்கில், தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, தமிழக அரசு ரூ.20 லட்சத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது.

இந்தத் தொகை பிரதமர் அலுவலகம் மூலம், கொழும்பு வில் உள்ள இந்தியத் தூதரகத் துக்கு அனுப்பப்படும் என தெரிவிக் கப்பட்டது.

மேல்முறையீடு மனு மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்ச உத்தரவிட்டார். நீதிமன்ற விசாரணை தொடங்கும் முன்பே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கு செலவுக்காக அனுப்பிய ரூ.20 லட்சத்தை மத்திய அரசிடம் இருந்து பெறும் முயற்சியில் தமிழக மீன்வளத்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, மீன் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததற்கான செலவு போக மீதமுள்ள தொகையை, திருப்பித் தருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தத் தொகையைக் கேட்டு, இரு தினங்களில் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், சவுதி அரேபியா வில் மீன் பிடிக்கும் பணிக்காக சென்று, தனியார் நிறுவனத்தில் ஊதியமின்றி தவிக்கும் 22 மீனவர் களை மீட்க இந்தப் பணத்தை பயன்படுத்தலாமா என்றும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சவுதி அரேபியாவுக்கு பணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்றுள்ள மீனவர்கள், அதிக வேலைப்பளு மற்றும் அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர்.

அவர்களது உறவினர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், 22 மீனவர்கள் மீது, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சவுதி அரேபியா தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

எனவே, அங்கு வழக்கை நடத்துவதற்கு மத்திய அரசிடம் இருக்கும் தமிழக அரசின் பணத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x