Published : 17 Nov 2014 04:34 PM
Last Updated : 17 Nov 2014 04:34 PM
முதலில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடுவது கடினம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுதிலுமே ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கேல் கிளார்க்கிற்கு நிரந்தர முதுகுவலி பிரச்சினை உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நேரம் இல்லாததால் அது தொடர்பான பிற காயங்களை மைக்கேல் கிளார்க் அனுபவித்து வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மைக்கேல் கிளார்க்கின் பின் தொடை தசைநார் பிரச்சினை தீவிரமடைந்தது. இப்போது அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பெர்பாமன்ஸ் கமிட்டி தலைவர் ஹோவர்ட் கூறும்போது, "நாங்கள் உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரை முன் நிறுத்தியுள்ளோம், இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவரால் விளையாட முடிந்தால் நல்லதுதான்.
ஆனால் அவர் அவசரம் அவசரமாக விளையாடி மீண்டும் ஓரிரு டெஸ்ட் போட்டிகள் சென்ற பிறகு காயமடைந்தால் அது விரும்பத்தகாதது. வேகப்பந்து வீச்சாளர் கூல்டர் நைல் இதே காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 8 வாரங்களில் மீண்டும் விளையாட முடிந்துள்ளது, ஆகவே இந்த வகையில் கிளார்க்கிற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
ஓரு தொடர் அல்லது 2 தொடர் என்று யோசிக்காமல் உலகத்தின் தலை சிறந்த வீரரான மைக்கேல் கிளார்க் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வேண்டும் என்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்றார் ஹோவர்ட்.
கிளார்க் விளையாட முடியாமல் போனால் பிராட் ஹேடின் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவரும் சமீப காலங்களில் அடிக்கடி காயமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT