Published : 02 Aug 2014 08:52 AM
Last Updated : 02 Aug 2014 08:52 AM

அங்கீகாரமற்ற மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன?- விவர அட்டவணையை அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவர அட்டவணையை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப் பிரமணியன் என்பவர் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி, அரசு அங்கீகாரம் பெறாமல் எந்தத் தனியார் பள்ளியும் செயல்பட முடியாது. ஆனால், சென்னையில் 700-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் பாதிப்புகளை அடைந் துள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அட்டவணை ஒன்றை பின்னர் தாக்கல் செய்வதாக அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள் ளதாவது: அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு ஏற்கெனவே கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அங்கீகாரம் பெற்று தான் செயல்படுகிறோம் என்பதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம். இல்லை யெனில் உரிய அங்கீகாரம் பெறு வதற்கு கால அவகாசம் தரும்படி கேட்கலாம்.

அங்கீகாரம் பெறுவது தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றவில்லை என்ற நிலை ஏற்படும் போதுதான் பள்ளிகளை மூடுவது தொடர்பான நடவடிக்கை எடுக்க இயலும். இந்தச் சூழலில் அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளை நிறைவேற்றாத பள்ளிகள் மீதான நடவடிக்கை பற்றிய அட்டவணையை அரசு தரப்பில் அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். அடுத்த விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x