Published : 13 Jul 2014 11:46 AM
Last Updated : 13 Jul 2014 11:46 AM

ராமானுஜன்: திரை விமர்சனம்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது கணித மேதை ராமானுஜனை நினைவு கூர்ந்திருக்கிறீர்களா? நான்கு இலக்க ரகசிய பின் நம்பர்களை அழுத்தி நாம் ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தும் முறை, ராமானுஜனின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆராய்ச்சியின் பரிசு!

அதுமட்டுமல்ல. இன்று உலகை ஆளும் பல தகவல் தொழில் நுட்பத்துக்கும் ராமானுஜனின் கணக்குகள் ஆதாரமாக இருக்கின் றன. விண்வெளிப் பயணத்தைக் கணக்கிடுவதிலும் புற்று நோய்க்கான சிகிச்சை முறையிலும் ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் உதவுகின்றன.

ஞானராஜசேகரனின் ‘ராமானுஜன்’ படம் இதையெல்லாம் தகவல்களாகவே சொல்கிறது. ஆனால் இந்தத் தகவல்கள் திரையில் வரிகளாக மிதக்கும்போது அந்தத் தகவல்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு மனிதனின் வலியை உணர முடிகிறது. அதற்கு காரணம் ராமானுஜனின் வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்திய ஞானராஜ சேகரனின் முயற்சி.

மேதைமையைப் புரிந்து கொள்ளும் திறனற்ற ஒரு சூழலில் ஒரு மேதை படும்பாடுகள் என்று ராமானுஜனின் வாழ்க்கையை மிகச் சுருக்கமாகச் சொல்லி விடலாம். இருந்தாலும் அவனைப் புரிந்துகொள்பவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோன்ற சில உதவிக ளால் ராமானுஜனால் தன் ஆராய்ச்சிகளில் மூழ்க முடிகிறது. அவனது மேதைமை வெளி உலகத்திற்குத் தெரிகிறது. மேற்கு உலகம் அவனை மதிக்கிறது.

மரபு சார்ந்த மனமும் பிரத்யேக மான பண்பாட்டுப் பழக்க வழக்கங்க ளும் கொண்ட ராமானுஜனால் மேற்கு உலகோடு ஒட்ட முடியவில்லை. பிறந்த நாட்டில் வறுமையும் அலட்சி யமும். வெளிநாட்டில் மனைவியைப் பிரிந்த வேதனையும் பண்பாட்டுத் தனிமையும். இப்படியாக வாழ்நாள் முழுதும் வலியைச் சுமந்து வாழ்கிறான் ராமானுஜன். இதற்கு நடுவிலும் அவன் கணித வேட்கை இடையறாமல் தொடர்கிறது.

ராமானுஜனின் வாழ்க்கையை செயற்கைப் பூச்சுக்கள் அதிகம் இன்றிப் பதிவு செய்கிறது படம். சிறு வயதிலேயே ராமானுஜனின் மேதைமை வெளிப்படுவது உணர்த் தப்படுகிறது. குறிப்பாக பூஜ்ஜியம் பற்றி ராமானுஜன் கேட்கும் கேள்வி.

ராமானுஜனின் பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோர் அவன் மேதைமையை எதிர்கொள்ளும் விதம், திருமணம் ஆன பிறகும் திருமண வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியாத அவஸ் தையும் நன்கு காட்டப்படுகிறது.

இன்று ஒருவர் தனது கண்டு பிடிப்பை மிக எளிதாக உலகிற்குச் சொல்லிவிட முடியும். ஆனால் கடல் கடந்துபோனாலே தோஷம் என்று கருதப்பட்ட நாட்களில் லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஃபெலோஷிப்பும் அங்கீகாரமும் பெற ராமானுஜன் படும் பாடுகள் இயல்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ராமானுஜன் வாழ்வில் தென்றலாய் வீசும் இல்ல றத்துக் காதல், இனிய கவிதையாகப் பதிவாகியிருக்கிறது.

ஒரு சில காட்சிகள் மனதில் நிற்கின்றன. அரசு அதிகாரியாக வரும் சரத்பாபு தற்செயலாக ராமானுஜனின் மேதைமையைக் கண்டுணரும் இடமும், லண்டனி லிருந்து வந்த பிறகு ராமானுஜன் தன் மனைவியைத் தனிமையில் சந்திக்கும் தருணமும் குறிப்பிடத் தக்கவை. பழமையில் ஊறிய மனிதர்கள் ராமானுஜனின் இறுதிச் சடங்கில்கூடக் கலந்து கொள்ளாமல் கிளம்பிவிடும் காட்சி வலிமையானது.

நடிகர்கள் தேர்வு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ராமானுஜனாக நடித்திருக்கும் அபிநய் பாத்திரத்துடன் கச்சிதமாகப் பொருந்துகிறார். மேதைமை யின் அவஸ்தையையும் லௌகீகப் பிடுங்கல்களையும் நன்றாக வெளிப்படுத்துகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் பாமா, அந்தக் காலத்துப் பெண்ணின் தோற்றத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். பிரிந்த கணவனைச் சந்திக்கும் இடத்தில் அவர் அழகிய முகம் வெட்கத்தில் குழையும் தருணம் பிரமாதம். மகனின் மேதைமையையும் உயிரையும் காப்பாற்றும் போராட்டத்தில் இருக்கும் அம்மா பாத்திரத்தில் சுஹாசினி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

கிளாசிக்கல் தன்மை கொண்ட பல வாத்தியங்களின் லைவ் இசையைக் கொண்டு பின்னணியில் ஒலிக்கும் ரமேஷ் விநாயகத்தின் இசை, காலகட்டத்தின் உணர்வைக் கடைசிவரை நிலை நிறுத்துகிறது. சன்னி ஜோசபின் கேமரா இயல்பான அசைவுகளோடும், ஊர்களின் அடையாளங்களை நிறுவும் கவனத்துடனும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் முக்கியமான குறை, லண்டனில் ராமானுஜனுக்கு என்ன பிரச்சினை என்பதைச் சரியாகச் சொல்லத் தவறியது. சொல்லப்பட்ட காரணங்களும் வலுவாகக் காட்டப்படவில்லை. லண்டன் காட்சிகள் மந்தமான நாடகக் காட்சிகளாகவே கடந்து போகின்றன.

ஒரு மேதையின் வாழ்வைச் சித்தரிக்கும் இந்தப் படம் பல இடங்களில் ஆவணத்தன்மை கொண்டிருக்கிறது. சில இடங்களில் முன்னே செல்லத் திணறுகிறது. என்றாலும் இவ்வளவு பெரிய சாதனையாளர் மிக எளிய மனிதனாக வாழ்ந்து, வலி சுமந்து, அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து மறைந்திருக் கிறார் என்பதை உணரவைப்பதில் இயக்குநர் நல்ல வெற்றி பெற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x