Published : 11 Oct 2013 11:41 AM
Last Updated : 11 Oct 2013 11:41 AM

தள்ளாட்டத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

'சீன பொம்மைகளின் வரவும், பிளாஸ்டிக் மோகமும் எங்க பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுருச்சு' - ஒரு அருமையான கலை, அழிவுப் பாதையில் பயணிக்க தொடங்கியதை வருத்தப்பட்டுச் சொன்னார்..

புரட்டாசி.. பொம்மைகளின் மாதம். வீட்டுக்கு வீடு கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். பரண் மேல் படுத்திருக்கும் பொம்மைகள் இந்த பத்து நாளும் ராஜா, மந்திரி, என மகுடம் சூட்டிக் கொள்ளும். ஆனால், காலம் காலமாய் மக்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்த தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளின் சாம்ராஜ்ஜியம் மெல்லச் சரிந்து கொண்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா.. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்பார்கள். இது கதையல்ல. ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டே இருந்தாராம். வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடித்தார்கள். வாய்ச் சொல்லில் வம்பளந்தால் கசையடி கொடுப்பார்கள் என்பதால் தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டார்களாம். அன்று ராஜாவை கேலி செய்வதற்காக உருவாக்கப்பட்ட தலையாட்டிப் பொம்மைகள் இப்போது தஞ்சையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்றாகி விட்டன.

தலையாட்டிப் பொம்மைகளை தஞ்சையின் கலைப் பண்பாட்டுச் சின்னம் என்கிறார்கள். இந்த பொம்மைகளை செய்வதற்காகவே தஞ்சையில், ‘தலையாட்டி பொம்மை தெரு' என்று ஒரு தெருவே இருந்தது. இங்கே செய்யப்பட்ட தலையாட்டி பொம்மைகள், வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்த காலங்கள் போய் இப்போது உள்ளூரிலேயே கேட்பாரில்லை. இதனால், இந்தத் தொழிலில் இருந்த பல குடும்பங்கள் மாற்றுத் தொழில்களைத் தேடி இடம் பெயர்ந்துவிட்டன. நான்கைந்து குடும்பங்கள் மட்டுமே இப்போது தலையாட்டிப் பொம்மைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன - அதுவும் கஷ்ட ஜீவனத்தில்!

"காலையில ஏழு மணிக்கு மண்ணை கையிலெடுத்துட்டு உக்காந்தோம்னா சாப்பாட்டு நேரம் போக ராத்திரி பத்து மணிக்குத்தான் எந்திரிக்க முடியும். இவ்ளோ நேரம் உழைச்சாத்தான் தலைக்கு முந்நூறு ரூபாயாச்சும் நிக்கும். ஒரு பொம்மை செய்ய 8 ரூபாய் அடக்கம் ஆகுது. அஞ்சு ரூபாய் லாபம் வைச்சு கடைக்காரங்களுக்கு குடுக்குறோம். அவங்க 25 ரூபாய்க்கு விக்கிறாங்க.

மழைக்காலத்துல எங்க பொழப்பு நாய்ப் பொழப்புங்க.. ஒரு காலத்துல தஞ்சையில முந்நூறு குடும்பங்கள் இந்தத் தொழில்ல இருந்தாங்க. பொம்மைகளோட அருமை தெரிஞ்சதால கிராக்கியும் இருந்துச்சு.

பொம்மை செய்யுற குடும்பங்களும் நல்லா வாழ்ந்தாங்க. ஆனா, சீன பொம்மைகளின் வரவும், பிளாஸ்டிக் மோகமும் எங்க பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுருச்சு.." - ஒரு அருமையான கலை, அழிவுப் பாதையில் பயணிக்க தொடங்கியதை வருத்தப்பட்டுச் சொன்னார் தலையாட்டி பொம்மைகளைச் செய்யும் சக்திவேல்.

"தலையாட்டி பொம்மைகளை செஞ்சுக்கிட்டு இருந்த பலபேர், இப்ப சித்தாள் வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் கெளம்பிட்டாங்க. காலையில பத்து மணிக்கு போறாங்க. அஞ்சு மணிக்கு திரும்பிடுறாங்க. ஒரு மணி நேரம் ஓய்வோட 350 ரூபாய் சம்பளம் கிடைக்கிறப்ப பொம்மைத் தொழிலை எதுக்கு பாக்கணும்னு நினைக்கிறாங்க. இந்தப் பொம்மைகளோட அருமை தெரிஞ்சவங்க, செட்டிநாட்டு ஆச்சிமார்கள்தான். தங்கள் வீட்டுத் தவழும் குழந்தைகள் தஞ்சாவூர் பொம்மையை வைச்சு விளையாடணும். அதுக கையால அந்த பொம்மைகள் உடைக்கணும்னு ஆச்சிமார்கள் ஒரு ஐதீகம் வைச்சிருக்காங்க. அவங்கதான் தேடித்தேடி வந்து எங்க பொம்மைகளை வாங்கிட்டுப் போறாங்க" என்கிறார் சக்திவேல்.

தஞ்சை தலையாட்டிப் பொம்மைகளின் தேடல் குறைந்து போனதால் 'டான்ஸிங் டால்' என்று சொல்லப்படுகின்ற நடனமாடும் பொம்மைகளை காஞ்சிபுரம், மாயவரத்திலிருந்து தருவித்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் தஞ்சையின் தலையாட்டி பொம்மை வியாபாரிகள்.

இந்தத் தொழிலுக்கு வங்கியில் கடன் உதவி கேட்டுப் போனால், ‘இதுக்கெல்லாம் கடன் தரமுடியாது' என்று சொல்லி கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக துரத்துகிறார்களாம்.

"1999-லேயே புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் மீது அரசின் கருணைப் பார்வை பட்டால்தான் உண்டு" என்கிறார்கள் பொம்மையை நம்பி இருக்கும் மனிதர்கள். இவர்களின் விருப்பத்துக்கு தலை அசைக்குமா தமிழக அரசு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x