கன்று பெரிதாகி கலைஞர் பேர் சொல்லும்!
குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பத்மநாபபுரம் எம்எல்ஏ-வுமான மனோதங்கராஜ் இயற்கை ஆர்வலரும் கூட! இவர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தலா 96 மரக் கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்படி நடப்படும் கன்றுகளை அந்தந்த ஊராட்சியின் திமுக செயலாளர்கள் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும் என்பதும் தங்கராஜின் தயவான உத்தரவாம். “ஒகி புயலால் சேதமான மரங்களுக்கு பதிலீடாய் இந்த மரங்கள் இருக்கும். இவை வளர்ந்து பெரிதானதும் கலைஞரின் அடையாளமாய் நிற்கும்’’ என்கிறார் இந்த இயற்கை நேசர்.
வனத்தோடு போனாலும் இனத்தோடு சேரு!
சசிகலாவை முதல்வராக்கும் திட்டத்துடன், “கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்” என முதல் குரல் எழுப்பியவர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். ஆனால், சசிகலா ஜெயிலுக்குப் போனதும் ஈபிஎஸ் ஆதரவாளராக மாறினார். இப்போது அதுவும் கடந்து ஓபிஎஸ்ஸின் அதி தீவிர விசுவாசியாக அவதாரமெடுத்து நிற்கிறார். தேனியில் ரவீந்திரநாத் குமாரின் வெற்றிக்கு முழுமுதல் காரணமே இவர்தான் என உதயகுமாரைக் கொண்டாடுகிறது ஓபிஎஸ் கோஷ்டி. கோட்டையில் கொங்கு அமைச்சர்கள் ஓவராய் கோலோச்சுகிறார்கள் என்கிற ஆதங்கத்தில் தான், வனத்தோடு போனாலும் இனத்தோடு சேர்வோம் என்ற முடிவில் ஓபிஎஸ்ஸின் பக்கம் சாய்ந்துவிட்டாராம் உதயகுமார்.