இளம்பிறை கவிதை

இளம்பிறை கவிதை

இருள் கவிழ்ந்த முன்னிரவில்...

கரையில் சுமை இறக்கி
தாள் கிழித்த கண் எரிந்த
சுனை அரித்த
எரிச்சல்களுக்கு இதமாக
குளிர்ந்த தாமரைக்குளத்தில்
வெகுநேரம்
விழுந்து கிடக்கும் பாட்டாளியாக
மெளனத்தில் விருப்பமுடன்
காலத்தை மிதக்க வைத்தல்
சற்றுமுன்
பூமிக்குள் மறைந்து கிடந்த நீர்
நீர்த்தொட்டி நிறைந்து
வழிந்துகொண்டிருப்பது போல்
மகிழ்வான நினைவுகளாய்
தெறித்துக்கொண்டிருத்தல்
மற்ற நினைவெல்லாம்
அற்றுப்போய் தவமாக
நிராதரவான
பச்சிளங் குழந்தையைப்
பாதுகாத்து வளர்ப்பவரின்
பாதத்தில் கிடத்துதல் போல்
ஒருவருக்கொருவர்
நம்பிக்கையோடு
ஒப்படைக்கும் தருணங்களில்
சுவாசித்துக்கொள்கிறது நேசம்.

வேறொன்றுமில்லை

கடல் சேரும் முன்
மழைத்துளிகள் படும்பாட்டை
வெளுத்த வானாகிப்
பார்த்துக்கொண்டிருப்பது
அலைகளை எதிர்த்து எதிர்த்து
பாறையாகிவிடுவது
கலங்கல்களை
வண்டலாக்கிப் படிவது
கண்ணீர் ஓய்ந்தும்
தேம்பிக்கொண்டிருப்பது
பொறுக்காத வலியுடன்
முனகிக் கிடப்பது
நள்ளிரவில் தனியாக
குரைக்கின்ற நாய் போல
தம்முடன் தான் மட்டும்
பேசிக்கொண்டிருப்பது
வீட்டுக்குள் புகுந்த நாகம்
வெளியேறிச் செல்லும்வரை
ஒதுங்கிப் பயத்துடன் காத்திருப்பது
கணப்பொழுதும் தனித்துவிடா
மனச்சொந்தம் உயிர்பந்தம்
என்பதன்றி
வேறொன்றுமில்லை
தனிமை என்பது
காலத்தை மிதக்க வைத்தல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in