பூரண மதுவிலக்கு எப்போது தான் சாத்தியமாகும்?

பூரண மதுவிலக்கு எப்போது தான் சாத்தியமாகும்?

தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரை கிளை. மதுரையில் பள்ளி அருகே செயல்பட்டுவரும் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அறிவுரையை அரசுக்கு வழங்கியிருக்கிறது. மதுவின் தீமைகளைச் சுட்டிக்காட்டியிருக்கும் நீதிபதிகள், மதுவிலக்கு கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
பொதுமக்களும் குழந்தைகளும் புழங்கும் பகுதிகளுக்கு அருகில், மதுபானக் கடைகளைத் திறப்பது எனும் தவறான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்கிறது. இதை எதிர்த்து மறியல் நடத்துவது முதல், நீதிமன்றப் படியேறுவதுவரை தங்களால் இயன்ற அளவுக்கு மக்களும் போராடிவருகிறார்கள். இனி, இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது அரசுதான். அதற்கு முழுமுதலான ஒரே தீர்வு பூரண மதுவிலக்குதான்!

கரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள்கூட, பொதுமுடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து ஒருகட்டத்தில் திறக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து, சில மாதங்களுக்கு மது அருந்தாமல் இருந்தவர்கள்கூட டாஸ்மாக் கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு பார்களும் திறக்கப்பட்டுவிட்டன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என பூரண மதுவிலக்கை நோக்கிய செயல்திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதியாக அவர் முன்வைத்தார். அதை அதிமுக அரசு அத்தனை அக்கறையுடன் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் அதிரடியான முடிவுகளை அறிவித்துவரும் முதல்வர், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்தும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் அதற்குத் தொடக்கமாக அமையட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in