தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. எதிர்பார்த்ததைவிட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே மழை தொடங்கியிருக்கும் சூழலில், சென்னை உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்திருக்கிறது. மழையை எதிர்கொள்ள அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றாலும், முந்தைய அனுபவங்களை வைத்துப் பார்க்கையில், அவை போதுமானவையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சென்னை தவிர 31 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருக்கிறது தமிழக அரசு. மேலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளுக்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் அவற்றைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்ளப்படுவது மிக அவசியம்.
2015 அக்டோபரில் தொடங்கிய வட கிழக்குப் பருவமழை, டிசம்பர் மாதத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்திய பாதிப்புகளை எளிதில் மறந்துவிட முடியாது. குறிப்பாக, சென்னை, கடலூரில் மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து தத்தளித்தனர்.
இந்த ஆண்டு இயல்பான அளவு மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனினும், மழையின் ஆரம்ப கட்டத்திலேயே சென்னையில் சில இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்திருக்கிறது. ஏற்கெனவே, ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததால், வெள்ள பாதிப்பு குறித்த அச்சம் மக்களிடம் இருக்கிறது.