தமிழையும்  இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதே திமுகவின் லட்சியம்! - திருச்சி சிவா எம்பி பேட்டி

தமிழையும்  இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதே திமுகவின் லட்சியம்! - திருச்சி சிவா எம்பி பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் புரட்சியால் ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. தொடர்ந்து இந்தியை எதிர்த்து வந்தாலும் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் அந்தக் கட்சியிடம் பழைய வேகம் இல்லை என்று சொல்லப்படும் நிலையில், இப்போது இந்தித் திணிப்புக்கு எதிராக என்ன செய்யப் போகிறது திமுக? மாணவர் பருவத்திலேயே மிசாவுக்கு எதிராகப் போராடி சிறை சென்றவரான திருச்சி சிவா எம்பியிடம் பேசலாம்.

புதிய கல்விக்கொள்கை வரைவுதானே வெளியாகி இருக்கிறது... இதைவைத்து இந்தித் திணிப்பு என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

அதில் மும்மொழித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கூடவே, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மாநில மொழியைப் படிக்கலாம் என்று சொன்னவர்கள், இந்தி பேசாத மாநிலங்களுக்கு அப்படியொரு வாய்ப்பைக் கொடுக்கவில்லை. அந்தந்த மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக இந்தியைத்தான் படிக்க வேண்டும் என்றார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். அவர்கள் சொல்லியிருப்பது சமாதான வார்த்தை தானே ஒழிய, வரைவை இப்போதே திருத்திவிட்டதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல.

1965-ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் அணி திரண்டது. ஆனால் இப்போது, எங்கள் அப்பாவைத் தான் இந்தி படிக்கவிடாமல் தடுத்துவிட்டீர்கள், எங்களையாவது படிக்க விடுங்கள் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே?

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாட்சி தத்துவம் நடைமுறையில் உள்ள ஒரு நாடு. பல்வேறு மொழி, கலாச்சாரம், மதம், இனங்களைக்கொண்ட ஒரு துணைக்கண்டம். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், நாட்டின் இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர்களைவிட மொழியால் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது. மொழி வழியாக வடக்கத்தவர்களின் ஆதிக்கம் ஊடுருவுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியை திராவிட இயக்கத்தினர் படிக்கவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுவது அபாண்டமான குற்றச்சாட்டு. தென்னிந்தியா முழுமைக்கும் இந்தியை கற்றுத்தருகிற தட்சண இந்தி பிரச்சார சபா சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுதான் செயல்படுகிறது. இப்போதும் கூட ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அங்கே இந்தி படிக்கிறார்கள். இந்தித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, இந்தி படிப்பதையல்ல.

திமுக எம்பி, எம்எல்ஏக்களின் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் இந்தி படிக்கிறார்கள். ஆனால், நம்மை மட்டும் தடுக்கிறார்கள் என்று எச்.ராஜா போன்றோர் குற்றம் சாட்டுகிறார்களே?

எச்.ராஜா அப்படித்தான் பேசுவார். திமுகவைச் சேர்ந்த சிலரது பிள்ளைகள் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கலாம். முதலில் தமிழ்நாட்டில் ஏன் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டுபோனவர்கள் யார்? இப்போதும் அதை மாநிலப்பட்டியலுக்குத் தராமல் தடுப்பவர்கள் யார் என்பதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும். தமிழகத்தில் ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற முறையைத் தடுக்க சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்த்தவர்கள் இப்போது ஏழைப்பிள்ளைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருவோம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அதை நடைமுறைப்படுத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனாலும், நாங்கள் விடப்போவதில்லை.

இந்தி அந்நிய மொழி, நம்மை ஆதிக்கம் செலுத்துவோரின் மொழி என்றால், ஆங்கிலம் மட்டும் என்னவாம் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

எது என்னுடையது இல்லையோ அது எல்லாமே அந்நியம் தான். அந்த வகையில் ஆங்கிலமும், இந்தியும் ஒரே நேர்க்கோட்டில் வந்துவிடுகின்றன. இன்னொரு விஷயம், இந்தி நமக்கு மட்டுமே அந்நியம், ஆங்கிலம் எல்லோருக்கும் அந்நியம். ஆனால், இந்தி ஒரு பிரிவினருக்குத் தாய்மொழி. அது எப்படி பொதுவாக முடியும்? நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய வீட்டில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதைத் திறந்துவிட்டு எனது பிள்ளைகளும் தெரு பிள்ளைகளும் அதில் விளையாட அனுமதிக்கிறேன். அவர்கள் ஒன்றாக விளையாடினாலும், என் வீட்டுப்பிள்ளைகளுக்கு இருக்கிற உரிமை தெரு பிள்ளைகளுக்கு இருக்குமா? ஆனால், அதே தெருவில் ஒரு மாநகராட்சிப் பூங்கா இருந்தால், அதில் என் பிள்ளைகளும், தெருவில் இருக்கிற எல்லாப்பிள்ளைகளும் யாருடைய ஆதிக்கமும் இல்லாமல், சம உரிமையோடு விளையாடலாம் அல்லவா? இங்கே மாநகராட்சிப் பூங்கா என்பது ஆங்கிலம். என் வீட்டுத்தோட்டம் என்பது இந்தி.

இந்தியை திணிக்க மாட்டோம் என்று பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியையே திமுகவினர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேருவையே மதிக்காதவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் நேரு கொடுத்த வாக்குதியை மட்டும் எப்படி மதிப்பார்கள் என்று தமிழ் தேசியர்கள் கேட்கிறார்களே?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in