எஸ்.எஸ்.லெனின்
மே, ஜூன் வந்துவிட்டால் கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க, பெருமிதத்துடன் அழைத்துவரும் பெற்றோர்களை எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.
பெற்றோரின் கைப்பிடித்துப் புதிய கனவுகளில் மிதக்கும் பிள்ளைகளும், அந்தக் கைப்பிடி வெம்மையில் நெகிழ்ந்திருக்கும் பெற்றோர்களுமாய் அற்புதமான காட்சி அது. ஆனால், பெற்றோரை இழந்த குழந்தைகள், தங்கள் கல்விக் கனவை தொலைக்கும் அவலமும் இங்கே இருக்கிறதுதானே! அதுபோன்ற ஆதரவற்ற தளிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த பொறியாளர் கி.கலைநாதன்.
தாயோ தந்தையோ அல்லது இருவருமோ இல்லாத கிராமப் புறக் குழந்தைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்டு இயங்கிவருகிறார் இவர்.