இந்தியன் நெ.1: இந்திய சினிமாவின் தந்தை

இந்தியன் நெ.1: இந்திய சினிமாவின் தந்தை

இந்தியர்களை ஒன்றிணைக்கும் முக்கிய மீடியமாக இன்று சினிமா விளங்குகிறது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியையே பிடிக்கும் அளவுக்கு சக்தி பெற்ற ஊடகமாக இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் திரைப்
படங்கள் இந்தியாவில் தயாராகின்றன. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிழல்தரும் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் சினிமா உலகுக்கு விதைபோட்டவரான தாதா சாகேப் பால்கேவைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

நாசிக் நகருக்கு அருகில் உள்ள திரும்பகேஸ்வர் (Trimbakeshwar) எனும் ஊரில் 1870-ம் ஆண்டு பிறந்தவர் தாதாசாகேப் பால்கே.  மும்பையில் பள்ளிப் படிப்பையும், வடோதராவில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பால்கே, குஜராத்தின் சூரத் நகரில் ஒரு புகைப்படக்காரராகத் தனது  வாழ்க்கையைத் தொடங்கினார். சூரத்தில்  மனைவி மற்றும்  மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் பால்கே.   1899-ல், சூரத் நகரில் பரவிய பிளேக் நோயில் தனது மனைவியும் மகனும் உயிரிழக்க, சோகத்துடன் மும்பைக்கே திரும்பினார் பால்கே.

மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்த தாதா சாகேப் பால்கேவுக்கு, 1902-ம் ஆண்டில் அவரைவிட 19 வயது இளையவரான காவேரிபாய் என்பவரைக்  குடும்பத்தினர் மறுமணம் செய்து வைத்தனர். 

தனக்கு விருப்பம் இல்லாதபோதிலும், மற்றவர்களின் வற்புறுத்தலால் இதற்கு சம்மதித்தார் பால்கே. மராத்திய வழக்கப்படி  திருமணத்துக்குப் பிறகு காவேரி பாயின் பெயர் சரஸ்வதிபாய் என மாற்றப்பட்டது. மறுமணத்துக்கு பின் அகழ்வாராய்ச்சி மையத்தில், வேலை பார்த்துவந்த பால்கே, பின்னர் 1906-ல்,  மேனாவலி என்ற  நகரில், ‘பால்கேஸ் ஆர்ட் அண்ட் பிரிண்டிங் வொர்க்ஸ்’ என்ற அச்சகத்தைத் தொடங்கி நடத்தினார். அதில் போதிய லாபம் கிடைக்காததால் அதையும் மூடிவிட்டார்.

 1910-ம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தில் பால்கேயின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அன்றைய தினம் மும்பையில் உள்ள ‘அமெரிக்கா இந்தியா சினிமாட்டோகிராபி’ என்ற தியேட்டரில் இயேசுநாதரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெளிநாட்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. அதைக் காண தனது மனைவி சரஸ்வதிபாயை அழைத்துச் சென்றார் பால்கே. தியேட்டரில் தன் கண் எதிரில் மனிதர்களின் பிம்பங்கள்  நகர்வதையும், ஓடுவதையும் மெய்மறந்து பார்த்தார் சரஸ்வதிபாய்.   படம் முடிந்த பிறகு, அந்த தியேட்டரின் ஆபரேட்டர் ரூமுக்குள் சரஸ்வதிபாயை அழைத்துச் சென்ற பால்கே, படம் எப்படித் திரையில் தெரிந்தது என்பதை விளக்கினார். இதைக் கேட்டு அவர் வாய்பிளந்து நிற்க, “இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி... இதே போல ஒரு படத்தை நானே எடுக்கப்போறேன் பார்” என்று  தனது கனவை வெளிப்படுத்தினார் பால்கே.

பால்கேயின் இந்த முடிவை அவரது மனைவி வரவேற்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்தனர். இதனால் குடும்பத்தின் செல்வம்  கரைந்து போய்விடும் என்று எச்சரித்தனர். ஆனால், சினிமா எடுக்கும் தன் முடிவில் உறுதியாக இருந்தார் பால்கே.  இருப்பினும் அதைச் செயல்படுத்த பணம் வேண்டுமே...

இந்த நேரத்தில் அவருக்கு உதவ சரஸ்வதிபாய் முன்வந்தார். பிறந்த வீட்டில் இருந்து தான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் பால்கேவிடம் கொடுத்த அவர், அதை வைத்துக்கொண்டு பால்கேயை ஐரோப்பாவுக்குச் செல்லுமாறு கூறினார். மனைவியின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான கருவிகளை வாங்கினார். பின்னர் லண்டன் சென்றவர், திரைப்படம் எடுப்பது பற்றிய நுணுக்கங்களையும் கற்றுத் தெரிந்தார்.

சினிமா பற்றிய நுணுக்கங்களைக் கற்றபோதிலும், அதற்குத் தேவையான கருவிகளை வாங்கி வந்தபோதிலும் தாதா சாகேப் பால்கேவின் திரைப்படக் கனவு அத்தனை எளிதில் நனவாகவில்லை.   படம் தயாரிக்கப் போதுமான பணம் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டார் பால்கே. கடைசியில்  தன் சொத்துகளையும், மனைவியின் சொத்துகளையும் விற்று சினிமா எடுக்கும்  பணிகளைத் தொடங்கினார்.

அடுத்தகட்டமாக, நடிகர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க யார்தான் முன்வருவார்கள். நாடகக் கலைஞர்கள் பலரை பால்கே அணுகியும், யாரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நீண்ட வற்புறுத்தல்களுக்கு பிறகு நடிக்கவைக்க முடிவெடுத்தார் பால்கே.

நடிகர்கள் கிடைப்பதற்கே இத்தனை பாடென்றால் கதாநாயகி கிடைக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் அவரது துயரங்களைப் பார்த்த சரஸ்வதி பாய், தானே படத்தின் நாயகியாக நடிக்க முன்வந்தார். ஏற்கெனவே, படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்களுக்கு சரஸ்வதிபாய்தான் சமைத்துப் போட வேண்டும் என்பதால், அவரை நாயகியாக்க யோசித்தார் பால்கே. கடைசியில் மும்பை ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராகப் பணிபுரிந்த  அன்னா சலுன்கே (Anna Salunkhe) என்ற  பெண்ணை வற்புறுத்தி நாயகியாக நடிக்கச் சம்மதிக்க வைத்தார்.

இப்படியாக பல்வேறு தடைகளைக் கடந்து 1913-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி மும்பையில் உள்ள ஒலிம்பியா தியேட்டரில் இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ பிரபலங்கள் பார்ப்பதற்காகத் திரையிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மும்பையில் உள்ள காரனேஷன் சினிமா என்ற அரங்கில் இப்படம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய சினிமாவின் தந்தை என்ற புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார் தாதா சாகேப் பால்கே. அன்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் பயணம், இன்று ஜெட் வேகமெடுத்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவு வளர்ந்துகொண்டு இருக்கிறது.

தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke), 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டில்  ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தை முதல் முறையாக திரையிட்ட தாதாசாகேப் பால்கே, அதன்பிறகு 95 முழுநீளப் படங்களையும் 27 குறும்படங்களையும் தயாரித்து, இயக்கி  வெளியிட்டார். 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி அவர் காலமானார். இந்தியத் திரையுலகுக்கு அவர் செய்துள்ள மகத்தான பணிகளைப் பாராட்டும் வகையில் 1969-ம் ஆண்டு முதல், சினிமா உலகில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு, ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in