பேசும் படம் - 23: கவாஸ்கரின் ஆ’ரம்ப’ சாதனை

பேசும் படம் - 23: கவாஸ்கரின் ஆ’ரம்ப’ சாதனை

கிரிக்கெட்டில் பெருமைப்படத்தக்க பல சாதனைகளைப் படைத்தவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன், 30 சதங்களைத் தொட்டு பிராட்மேனின் சாதனையை முறியடித்தது (29 சதங்கள்) என காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும்படியான பல சாதனைகள் அவருக்கு உரியது. ஆனால், இதே கவாஸ்கர் மறக்க விரும்பும் சாதனை ஒன்றும் உண்டு. முதலாவது உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 174 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்களை மட்டுமே அடித்தார் என்பதுதான் அந்த சாதனை.

1960-களில் கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட்தான் என்ற நிலை இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் தொடங்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்து, 1970-களின் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் கால் பரப்பியது. இதன் அடுத்த கட்டமாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பலமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டியைப் போல் இல்லாமல் விறுவிறுப்பாக ஆடி ரன்களைக் குவித்தது. டென்னிஸ் எமிஸ் 147 பந்துகளில் 137 ரன்களை விளாச, நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் (அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை அந்த அணி சேர்த்தது.

335 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், சோல்கரும் களம் இறங்கினர். இந்திய அணிக்கு இப்போது கோலி எப்படியோ, அப்படித்தான் அன்று கவாஸ்கர் இருந்தார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சதங்களாகக் குவித்துவந்த கவாஸ்கர், இந்தியாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மைதானத்தில் நடந்ததோ வேறு. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எத்தனை வேகத்தில் பந்து போட்டாலும் ‘டொக்’ வைத்து தடுப்பது ஒன்றே தன் பணி என்ற அளவில் அனைவரின் பொறுமையையும் சோதித்தார் கவாஸ்கர்.

சரி... முதல் 10 ஓவர்கள் பொறுமையாக ஆடிவிட்டு, புதுப்பந்து பழசானதும் கவாஸ்கர் வித்தை காட்டுவார் என்று அணியினரும் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்க, பத்தல்ல இருபதல்ல 30 ஓவர்களுக்குப் பிறகும் அவரது போக்கில் மாற்றமில்லை. அணியின் மற்ற வீரர்கள் தண்ணீர் பாட்டில் கொடுப்பதுபோல் மைதானத்துக்குள் நுழைந்து ஆலோசனை சொல்லியும், ரசிகர்கள் சிலர் மைதானத்துக்குள் புகுந்து கெஞ்சிக்கேட்டும், தன் நிலையில் இருந்து சற்றும் மாறாமல் டொக் மன்னனாக மைதானத்தில் நின்றார் கவாஸ்கர். இதனால் பெரும்பாலான ரசிகர்கள் போரடித்துப் போய் மைதானத்தில் இருந்தே வெளியேறி விட்டனர்.

கவாஸ்கரின் ஆட்டம் மற்ற வீரர்களையும் பாதிக்க, 60 ஓவர்களின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ‘டொக்’கே பிரதானம் என்று கடைசிவரை அவுட் ஆகாமல் மைதானத்தில் நின்ற கவாஸ்கர், 174 பந்துகளை எதிர்கொண்டு, ஒரே பவுண்டரியுடன் 36 ரன்களை எடுத்தார். கவாஸ்கரின் அந்தப் பொறுமையான இன்னிங்ஸை அதைவிட அசாத்தியமான பொறுமையுடன் கண்காணித்து, அவர் ஆவேசமாக ஆடிய அதிசயப் பொழுதில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் இங்கிலாந்து புகைப்படக்காரரான டென்னிஸ் ஓல்ட்ஸ் (Dennis Oulds).

இப்போட்டியில் இந்திய அணியின் மேலாளராக இருந்த ஜி.எஸ்.ரமாசந்த் இதுபற்றி கூறும்போது, “ஆடுகளம் ஸ்லோவாக இருந்ததால் அடித்து ஆட முடியவில்லை என்று கவாஸ்கர் கூறினார். ஆனால், இதை ஏற்க நான் தயாராக இல்லை. இதே ஆடுகளத்தில்தானே இங்கிலாந்து 334 ரன்களைக் குவித்தது” என்றார்.

அதே நேரத்தில், தனது விருப்பத்துக்கு மாறாக எஸ்.வெங்கட்ராகவனை தேர்வுக்குழுவினர் கேப்டனாக நியமித்ததை மனதில் வைத்தே கவாஸ்கர் இப்படி வஞ்சம் தீர்த்ததாகவும் அப்போது ஒரு பேச்சு இருந்தது.

டென்னிஸ் ஓல்ட்ஸ்

1917-ம் ஆண்டில் பிறந்த டென்னிஸ் ஓல்ட்ஸ், முதலில் பொறியியல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு நடந்த ஒரு விபத்தில் வலதுகை விரல்களை இழந்ததால் அந்த வேலையை விட்டார். இதைத்தொடர்ந்து ஓல்ட்ஸின் தந்தை புகைப்படத் துறையில் இவரை ஈடுபடுத்தினார். முதலில் ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் பகுதி நேர புகைப்படக்காரராக இருந்த இவர் பின்னர் பல ஆண்டுகாலம் லண்டனில் உள்ள சென்ட்ரல் பிரஸ் ஏஜென்ஸியில் பணியாற்றினார். கிரிக்கெட் தொடர்பான படங்களை எடுப்பதில் புகழ்பெற்றவரான இவர் 2006-ம் ஆண்டில் காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in