விடாது துரத்து... - துளைக்கும் சிபிஐ  தவிக்கும் சிதம்பரம்!

விடாது துரத்து... - துளைக்கும் சிபிஐ  தவிக்கும் சிதம்பரம்!

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

1984-ல், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, 1985 செப்டம்பரில் மத்திய அமைச்சரவையை சற்றே மாற்றியமைத்தார். அப்போது இளைஞரான ப.சிதம்பரத்துக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘ஜவுளித் துறை இணையமைச்சர்’. இதுதான் சிதம்பரத்துக்காக ராஜீவ் அப்போது ஒதுக்கிய இலாக்கா. ஆனால், “எனது உறவினர்கள் பலர் ஜவுளித் துறையில் இருக்கிறார்கள். எங்களது குடும்பத்திற்கே டெக்ஸ்டைல் மில்கள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் நான் அது சார்ந்த துறைக்கு அமைச்சராவது எங்காவது எனது நாணயத்தைக் கேள்வி கேட்கும்” என்று சொல்லி மறுத்தார் ப.சிதம்பரம். இதையடுத்து, அவரை வர்த்தகத் துறை இணையமைச்சர் ஆக்கினார் ராஜீவ். அப்படிப்பட்ட நாணயஸ்தர் சிதம்பரம் இப்போது ஊழல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிபிஐ பிடியில் இருக்கிறார்.

சிக்கவைக்கப்பட்டு என்று ஏன் சொல்கிறேன் என்றால், இது சிதம்பரத்தால் வந்த வினை அல்ல. அவரது மகன் கார்த்தியால் கொண்டுவரப்பட்ட மேல் வினை. ஆம், சிதம்பரத்தின் சிவகங்கை பக்கம் இப்போது இப்படித்தான் பேசுகிறார்கள். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் சிதம்பரம் வர்த்தக அமைச்சராக இருந்தபோது, அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ‘ஃபேர் குரோத் ஊழல்’ வலை பின்னப்பட்டது. அதை எதிர்த்து தர்க்கம் செய்யாத சிதம்பரம், உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டார். அந்த வழக்கில், தான் நிரபாராதி என்று தீர்ப்பு வந்த பிறகே மீண்டும் மத்திய அமைச்சரவைக்குள் வந்தார்.

இதையும் ஞாபகப்படுத்தும் தொகுதிவாசிகள், “செட்டிநாட்டுப் பக்கம் 80-களில் சிதம்பரத்தின் நகரத்தார் சமூகத்து திருமண நிகழ்வுகளுக்குப் போனால், எவர் சில்வர் வாளிக்குள் பிஸ்கெட் பாக்கெட்போட்டுக் கொடுப்பது ஒரு மரியாதை; கவுரவம். ஆனால், அப்படிக் கொடுத்தால் பிஸ்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு வாளியைத் திருப்பிக் கொடுத்துவிடுவார் சிதம்பரம். அப்படிப்
பட்ட மனிதர், இதுவரை எந்த ஊழல் வழக்கிலும் சிக்காமல் இருந்தவர் கடைசிக் காலத்தில் மகன் செய்த காரியத்தால், இப்போது சிபிஐக்கு பயந்து ஓடி ஒளிந்து திரிந்தது பார்க்கவே சங்கடமாக இருந்தது” என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in