நீரோடிய காலம் 18: துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்!

நீரோடிய காலம் 18: துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்!

இந்து மதம், சமணம், பவுத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில் இந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பவுத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக இருந்த தஞ்சையிலும் பவுத்தத்தின் தாக்கம் இருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது. இந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பவுத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா. ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மஹாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த சந்திப்பு இது.

நெற்றியில் திருநீறு துலங்க நம்மை வரவேற்றார் ஜம்புலிங்கம்.

“தீவிர சைவ சமய பக்தரான நீங்கள் பவுத்தம் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியது எப்படி என்ற கேள்வியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்” என்றேன்.

‘ஹா… ஹா…’ என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தார் ஜம்புலிங்கம். “சோழ நாட்டில் பவுத்தத்தின் தடத்தைத் தேடும் ஆய்வை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கினேன். அன்றுமுதல் இன்றுவரை என்னைப் பார்க்கும் பலரும் கேட்கும் கேள்விதான் இது” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார், “என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல ஆய்வாளர் தன் விருப்புவெறுப்பைத் தன் ஆய்வின் மீது திணிக்கக் கூடாது. அந்த வகையிலேதான் ஒரு இந்துவாகிய நான் திறந்த மனதுடன் பவுத்தம் தொடர்பான ஆய்வைத் தொடங்கினேன்” என்றார்.

“இருபத்தைந்து ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைச் சோழ மண்டலத்தில் கண்டுபிடித்திருக்கிறீர்கள். உங்கள் பயணம் அவ்வளவு எளிதாக இருந்ததா?”

“தொடக்கம் முதலே சிரமம்தான். மயிலை சீனி.வேங்கடசாமி 1940-ல் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ புத்தகம் ஒரு சிறிய திறப்பை எனக்குக் கொடுத்தது. அவரே சோழ நாட்டில் பத்து புத்தர் சிலைகளைத்தான் பட்டியலிட்டிருக்கிறார். அதிலும் அவர் முதல் தடவை பார்த்த சில சிலைகள் இரண்டாம் முறை பார்த்தபோது காணக்கிடைக்கவில்லையாம். இலக்கியத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக பவுத்தத்தின் சுவடுகள் ஆழமாக இருக்கின்றன. ஆனால், களத்தில் இந்தச் சுவடுகள் அருகிவிட்டன. இந்த வரலாற்று இடைவெளியை நிரப்பும் முயற்சியில்தான் எனது ஆய்வைத் தொடங்கினேன்.

முதலில், வாழும் பவுத்தர்கள் யாராவது சோழ மண்டலத்தில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன். ஒருவரும் கிடைக்கவில்லை. அடுத்ததாக புத்தர் சிலைகளைத் தேட ஆரம்பித்தேன். மயிலை சீனி.வேங்கடசாமி பார்த்ததாகச் சொன்ன பத்து சிலைகளுடன் நான் பார்த்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிலைகளைச் சேர்த்துக்கொண்டால் இதுவரை அறுபது சிலைகளுக்கும் மேல் கண்டறியப்பட்டிருக்கின்றன” என்றார்.

“ஆனால், அருங்காட்சியகங்களில் நிறைய இருக்கின்றனவே” என்று கேட்டேன்.

“நான் குறிப்பிடுவது களத்தில் கண்ட சிலைகளை. அருங்காட்சியகத்தில் நிறைய சிற்பங்கள் உண்டு. அவையெல்லாம் நாகப்பட்டினத்தில் சுதந்திரம் அடைவதற்கு முன்பு தோண்டியெடுக்கப்பட்ட வெண்கலச் சிற்பங்கள். முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களை அப்போது தோண்டியெடுத்தார்கள். அவற்றில் பெரும்பாலான சிற்பங்கள் கொல்கத்தாவில் உள்ளஅருங்காட்சியகத்துக்கும், வெளிநாட்டிலுள்ள பல அருங்காட்சியகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும் கணிசமான நாகப்பட்டினம் புத்தர் சிற்பங்கள் உண்டு ” என்றார்.

“நாகப்பட்டினத்தில் விகாரைகள் இருந்ததால் அவ்வளவு சிலைகள் அங்கு கிடைத்தனவோ?” என்று கேட்டேன்.

“ஆமாம்! ஆனால் அந்த விகாரைகள் நூறு ஆண்டுகளுக்கும் முன்பே இடிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் விகாரைகள் என்றால் முதலில் பூம்புகாரையும் அடுத்ததாக நாகப்பட்டினத்தையும்தான் கூற வேண்டும். புத்தர் கோயில்களெல்லாம் பின்னால் வந்தவை. அங்கங்கே கிடக்கும் புத்தர் சிலைகளை வைத்துக் கட்டியவை. புத்தமங்கலம் என்ற ஊரில் புத்தர் சிலையை வைத்துக் கோயில் கட்டி வழிபடுகிறார்கள். கோயில் கட்ட தாய்லாந்துக்காரர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள். இதைப் போல், மாயவரத்துக்குப் பக்கத்திலுள்ள பெருஞ்சேரி என்ற ஊரில் புத்தர் கோயில் இருக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்று உறுதிசெய்யும் நிலை

யில் எந்தக் கோயிலும் கிடையாது. சிலைகள் பழசு. கோயில்கள் புதுசு” என்றார்.

“என் அனுபவத்திலும் நான் முதல் களப்பணியில் பார்த்த சிலைகள் சிலவற்றை என் இரண்டாவது களப்பணியில் காண முடியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சமயக் காழ்ப்புணர்வு. இரண்டு, நமக்கு வரலாற்றின் மீது அக்கறையோ கலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோ கிடையாது என்பது. படிக்காதவர்கள், படித்தவர்கள் எல்லோரும் இந்த விஷயங்களில் தவறிழைத்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் சில ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன. 

முதன்முறை நான் பார்த்தபோது சீந்துவாரின்றி இருந்த சில சிலைகள் அடுத்த முறை பார்க்கும்போது மக்களால் வழிபடப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அது எனக்கு ஒரு பெருமை. ஏனெனில் முதல் முறை நான் பார்க்கப்போனபோது என்னை நிறைய பேர் சந்தேகக் கண்ணுடன் பார்த்திருக்கிறார்கள். நான் திருடிக்கொண்டுபோக வந்திருக்கிறேன் என்று. அப்புறம், பலருக்கும் இந்தச் சிலைகள் புத்தர் சிலைகளா இல்லை சமணத் தீர்த்தங்கரர்களின் சிலைகளா என்றே தெரியாது. அப்படி, புத்தர் என்றால் தேவையில்லை என்று நினைத்த கூட்டத்தையும் காண முடிந்தது. இந்தத் தரப்புகளுக்கு இடையே ஆவணப்படுத்துவது மட்டும்தான் ஒரு ஆய்வாளரின் நிலைப்பாடு” என்று கூறினார்.

“இந்தத் தேடலில் நீங்கள் எதிர்கொண்ட சுவாரசியங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று கேட்டேன்.

“திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் மீசையுடன் இருந்த புத்தர் சிலையை நான் பார்த்தேன். இது போன்ற ஒரு புத்தர் சிலையைத் தமிழகத்திலோ அநேகமாக இந்தியாவிலோ வேறு எங்கும் உங்களால் பார்க்க முடியாது. புத்தர் சிலைகளுக்குரிய எல்லா அம்சங்களும் அதில் இருந்தன. கூடுதலாக மீசையும் இருந்தது! மன்னர் என்று குறிப்பதற்காகவோ, வீரத்தைக் குறிப்பதற்காகவோ, சிற்பி தனது ஆசைக்காகவோ இதனை வைத்திருக்கலாம். முதலில் பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் இதனை நம்பவில்லை. நேரில் பார்த்த பின்னர்தான் ஏற்றுக்கொண்டார்கள். அப்புறம், துபாய் புத்தர். ஒகுளூர் எனும் ஊரில் இருக்கிறார். வெளிநாட்டுக்குப் போகிறவர்கள் யாருக்கும் தெரியாமல் காலையில் மாலை போட்டுவிட்டுப் போவார்கள். சிலை மேலே மாலை இருந்தது என்றால் நம் ஊர்க்காரர் யாரோ இன்று வெளிநாடு போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அதிகம் பேர் துபாய் போனதால் ‘துபாய் புத்தர்’ என்று பேராகிவிட்டது. அதேபோல், புதூர் என்ற ஊரில் இருக்கும் புத்தருக்குக் கல்யாணராசி! திருமணமாகாத பெண்கள் அவரைச் சுற்றிவந்தால் திருமணம் நடக்கும் என்று ஒரு நம்பிக்கை. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஊரில் உள்ள பல பெண்களும் திருமணத்துக்கு முன்னாடி புத்தரோடு ஒரு புகைப்படம், திருமணத்துக்குப் பிறகு கணவரோடு சேர்ந்து புத்தரோடு ஒரு புகைப்படம் என்று எடுத்து வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள். இந்த மாதிரி விஷயங்கள்தான் நம் ஆய்வை சுவாரசியப்படுத்துகின்றன” என்றார் ஜம்புலிங்கம்.

“அப்புறம் இன்னொரு விஷயம். என் ஆய்வைப் படித்துவிட்டு அய்யம்பேட்டை செல்வராஜ் என்ற வரலாற்று ஆர்வலர் என்னைத் தொடர்புகொண்டார். நான் குறிப்பிடுவதுபோன்ற நாகப்பட்டினம் புத்தர் சிலையொன்றை அய்யம்பேட்டையில் கண்டதாகக் கூறினார். அப்படிப் போய்ப் பார்க்கும்போது அய்யம் பேட்டையில் ஒரு வீட்டில் முனீஸ்வரன் என்று சொல்லி புத்தர் சிலையை வைத்து வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் பெண்மணி நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா, தாத்தா எல்லாம் வழிவழியாக வைத்து வழிபட்ட சிலை அது என்று கூறினார். பிறந்த வீட்டின் சீதனமாக அதை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சிலையைத் தொடக்கூட எங்களை அவர் அனுமதிக்கவில்லை. ஆக, அருங்காட்சியம் தவிர்த்து ஒரு நாகப்பட்டினம் புத்தர் சிலையைப் பார்த்தாகிவிட்டது. இப்படி, புத்தர் சிலைக்கு உள்ளூரில் மக்கள் பல பேர் வைத்து சிவனார், சாம்பான், புத்தர் என்றெல்லாம் பேர்வைத்துக் கும்பிடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பது இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்” என்றார்.

ஆச்சரியமூட்டும் மனிதர். ஆச்சரியமூட்டும் தேடல். தற்போது தலித்திய எழுச்சியின் காரணமாக பா.ஜம்புலிங்கத்தின் ஆய்வுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. காவிரி கால் பட்ட இடமெல்லாம் பன்மைக் கலாச்சாரங்களையும் அரவணைத்து ஓடினாள் என்பதை ஜம்புலிங்கத்தைப் போன்றவர்களின் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. தஞ்சைக்குக் காவிரியும் முக்கியம், அதன் பன்மைக் கலாச்சாரமும் முக்கியம் என்பதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது!

(சுற்றுவோம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in