அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களுக்கு செங்கோட்டையன் நேரடியாக ஃபோனில் தொடர்புகொண்டு பேசி வருகிறார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், “அதிமுகவில் பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட மற்றும் அவரின் தலைமையை ஏற்க விரும்பாத முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உள்ளனர். இந்த அதிருப்தியாளர்களுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படாது. அவ்வாறு ஓரம் கட்டப்பட்ட முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை செங்கோட்டையன் நேரடியாக செல்போனில் அழைத்துப் பேசுகிறார். அவரிடம் தேர்தல் செலவுக்கு பணம் எதுவும் இல்லை என்று கூறினாலும் ‘என்னை நம்பி வாங்க’ என தெரிவிக்கிறார்.
எம்ஜிஆர் மன்ற செயலாளருமான பல்பாக்கி கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இதுபோல் பலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
யார் யார் எல்லாம் தவெகவுக்கு தாவ உள்ளனர் என்பது வரும் நாட்களில் தெரியவரும். திமுக உள்ளிட்ட பிற கட்சியினரை செங்கோட்டையன் தொடர்பு கொள்வது கிடையாது. செங்கோட்டையனை வைத்து அதிமுகவை, பாஜக பலவீனப்படுத்தி வருகிறது. இதை பழனிசாமியும் நன்கு அறிவார். ஆனால் மயான அமைதி காத்து வருகிறார்” என்றார் அந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ.
இதனிடையே, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் நிர்வாகி அஜிதா விஜய் காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதுடன், தற்கொலைக்கும் முயன்றார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் தவெக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அலுவலகத்தை திறந்துவைக்க வந்தபோது, கட்சியினர் சிலர் அவரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளகோவில் பகுதிக்கு ஈரோடு, தாராபுரத்தைச் சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்ததாகவும், கட்சி மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களுக்கு, பதவி வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
செங்கோட்டையன் காரை செல்ல விடாமல் தடுத்த கட்சியினர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோட்டையன் “அனைவரும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு பேசி, பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார். இந்நிலையில், செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் முற்றுகையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.