கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று தொண்டாமுத்தூர். கோவை மாநகராட்சியின் 19 வார்டுகளையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஏராளமான கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.
கோவை மாநகராட்சியின் செல்வபுரம், தெலுங்குபாளையம், ஆர்.எஸ்.புரத்தின் குறிப்பிட்ட பகுதிகள் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளும், போளுவாம்பட்டி, தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர் நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டணம், நரசீபுரம், மத்துவராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, வேடப்பட்டி, தாழியூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளும் இத்தொகுதியில் வருகின்றன.
பழமை வாய்ந்த சிவத்தலமான பேரூர்பட்டீசுவரர் ஆலயம், பேரூர் ஆதீனம், ஈஷா யோகா மையம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், முக்கிய பொழுது போக்கு மையங்களில் ஒன்றான கோவைக் குற்றாலம் போன்றவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.
கவுண்டர் சமுதாயத்தினர் இந்த தொகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து, ஒக்கலிககவுடர், நாயக்கர் சமூகத்தினர், பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கணிசமாக வசிக்கின்றனர்.
விவசாய விளை நிலங்கள் அதிகளவில் இத்தொகுதியில் இருந்தாலும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் இந்த தொகுதியில் உள்ளன. திராட்சை, வாழை, தென்னை, பாக்கு சாகுபடி இங்கு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளின் பிரச்சினை
திராட்சை விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற வன விலங்குகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
யானை - மனித மோதல்களை தடுக்க வேண்டும் எனத் தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் காவிரி ஆற்றில் சென்று தேவையின்றி கலக்கிறது.
இதைத் தடுக்க, இத்தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குட்டைகளில், வெள்ளப் பெருக்கின்போது வரும் நீரை குழாய் மூலம் பம்பிங் செய்து, புதிய குட்டைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் 2009-ல் நடந்த ஒரு இடைத்தேர்தல் உட்பட மொத்தம் 16 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், அதிமுக 7 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் தலா 3 முறையும், மா.கம்யூனிஸ்ட், மதிமுக, தமாகா ஆகியவை தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
குறிப்பாக, 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விஐபி தொகுதிகளில் ஒன்றாக தொண்டாமுத்தூர் உள்ளது. அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் எஸ்.பி.வேலுமணி இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேயன், நாதக சார்பில் ரஜ்பு நிஷா, தவெக சார்பில் சதீஷ் ராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தொகுதியை நன்கு அறிந்தவர், மக்களுக்கு பரிச்சயமானவர் என்பது அதிமுக வேட்பாளர் வேலுமணிக்கு பலம். தொகுதியில் கட்சியினரை தாண்டி அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்பது திமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பலவீனம்.
இருப்பினும், தேர்தல் வித்தகர் செந்தில்பாலாஜியின் அரசியல் வியூகங்களால் வேலுமணிக்கு அதிர்ச்சியளித்து நம்மை கரை சேர்த்துவிடுவார் என திமுக வேட்பாளர் கார்த்திகேயன் நம்புகிறார். தவெக சார்பில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், எஸ்.பி.வேலுமணியின் அரசியல் குருவுமான கே.பி.ராஜூவின் மகன் சதீஷ் போட்டியிடுகிறார்.
கே.பி.ராஜூவின் மறைவுக்கு பின்னர் அதிமுக தங்களுக்கு உறுதுணையாக இல்லை என்ற எண்ணம் சதீஷுக்கு உண்டு. உள்ளூர் அரசியலில் வேலுமணியை வீழ்த்த நினைக்கும் சொந்த கட்சியினரின் மறைமுக ஆதரவு தவெக வேட்பாளர் சதீஷுக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாதக வேட்பாளர் ரஜ்புநிஷா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொண்டாமுத்தூரில் வேலுமணியை தோற்கடிக்க வேண்டும் என 2021-ல் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை இத்தொகுதியில் நடத்தினார் ஸ்டாலின். அந்த அளவுக்கு வேலுமணி மீதான எதிர்ப்பு திமுகவுக்கு இருந்தது. ஆனால், தற்போதைய தேர்தலில் நிலை அப்படி இல்லை.
இத்தொகுதியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி சீட் எதிர்பார்த்தார். ஆனால், புதுமுகம் கார்த்திகேயன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து 4-வது முறையாக வென்று, தொண்டா முத்தூர் அதிமுகவின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் முனைப்பில் பிரச்சாரத்தை வேலுமணி தீவிரப்படுத்தியுள்ளார்.
முதல்முறையாக வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வேண்டும் என நினைத்து களமிறங்கியுள்ளார் திமுக வேட்பாளர் கார்த்திகேயன். இதனால் தொண்டாமுத்தூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,41,641
பெண் - 1,51,577
3-ம் பாலினத்தவர் - 106
மொத்த வாக்காளர்கள் - 2,93,324