வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், BNP எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார். லட்சக்கணக்கானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது, வங்கதேச அரசியலில் முக்கியத் திருப்பமாக பார்க்கப்படுகிறது. யார் இந்த தாரிக் ரஹ்மான் என சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவோம்.
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுஉள்ளது. அங்கு பிப்ரவரி 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் வங்கதேச தேசியவாத கட்சி, மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி, அடிப்படைவாத கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.
இதனிடையே, வங்கதேச முன்னாள் பிரதமரும், BNP கட்சியின் தலைவருமான 80 வயது கலீதா ஜியா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில்தான் கலீதா ஜியாவின் மகனும், BNP கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் பிரிட்டனில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு திரும்பினார்.
அவாமி லீக் கட்சி கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய வழக்கில் கடந்த 2004-ம் ஆண்டில் தாரிக் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு அவர் மீது 84 ஊழல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் பல்வேறு வழக்குகளில் அடுத்தடுத்து தண்டனைகள் விதிக்கப்பட்டன. கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ரகசியமாக உடன்பாடு செய்துகொண்ட தாரிக், கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் விடுதலையானார். அதே ஆண்டு செப்டம்பரில் மனைவி, குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அவர் குடியேறினார். சுமார் 17 ஆண்டுகள் அரசியல் துறவறம் பூண்டிருந்த அவர் மீண்டும் வங்கதேச அரசியலில் கால் பதிக்கிறார். வரும் பொதுத் தேர்தலில் BNP கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் களமிறங்குகிறார்.
டாக்கா விமான நிலையத்தில் லட்சக்கணக்கான BNP தொண்டர்கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்மானை வரவேற்றனர். அவரது மனைவி ஜூபைதா, மகள் ஜைமா ஆகியோரும் உடன் வந்துள்ளனர். குண்டுதுளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மானும் குடும்பத்தினரும் டாக்காவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
டாக்கா திரும்பிய பிறகு, தாரிக் ரஹ்மான், இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, போதிய பாதுகாப்பு வழங்கியதற்காக அவர் யூனுஸுக்கு நன்றி தெரிவித்தார்.
வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான், “வங்கதேச நலனுக்கான திட்டத்துடன் வந்திருக்கிறேன். இதை நடைமுறைப்படுத்த வங்கதேச மக்களின் ஆதரவு தேவை. நம் நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவரும் உள்ளனர். அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பான தேசமாக வங்கதேசத்தை உருவாக்குவோம்” என்று முழங்கியிருக்கிறார் தாரிக் ரஹ்மான்.
பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தலில் ஹசீனாவின் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், BNP வெற்றிபெற்று கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.