சில தினங்களுக்கு முன்பு பிரவீன் சக்கரவர்த்தியையும் மாணிக்கம் தாகூரையும் தனியே அழைத்துப் பேசினார் ராகுல் காந்தி. இவர்கள் இருவரும் ‘அதிகாரத்தில் பங்கு’ கோஷத்தை முன்னெடுப்பவர்கள் என்பதால் இவர்களை ராகுல் அழைத்துப் பேசியது பல்வேறு ஊகங்கங்களை உலவவிட்டது. இனிமேல் இருவரும் அடக்கி வாசிக்கலாம் என்றும் சொல்லப்பட்ட நிலையில், மீண்டும், “அதிகாரப் பகிர்வு அவசியம்; ஆட்சியில் பங்கு எங்களின் உரிமை” என முழங்கினார் மாணிக்கம் தாகூர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இதுபற்றி ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை ஆகியோர் கேட்டால் பதில் சொல்லலாம் மற்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று சொன்னார். இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் சீனியர்கள் சிலர், “கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு என எங்கள் தரப்பில் திமுக-வுக்கு அழுத்தம் தரப்பட்டாலும் இன்னொரு கூட்டணிக்குப் போவது குறித்து நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அது தெரிந்துதான் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் நிதானம் காக்கிறார்.
காங்கிரஸ் தலைமையும் இந்த விஷயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் தேசிய அளவில் காங்கிரஸுக்கு கைகொடுக்கும் நம்பிக்கையான தோழனாக திமுக இருப்பதுதான். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டால் தேசிய அரசியலில் இரண்டு கட்சிகளுக்குமே இழப்புதான். இதையெல்லாம் ஒன்றுக்கு பலமுறை யோசித்த பிறகு, ஆட்சியில் பங்கு என்ற தமிழக காங்கிரஸாரின் கோரிக்கைக்கு “தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம்” என்ற ஒரு பதிலையாவது திமுக-விடம் காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது” என்றனர்.
இந்த நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தரப்பு ராகுலிடம், “காங்கிரஸுக்கு எப்படியும் 35 சீட்களுக்குக் குறையாமல் வாங்க வேண்டும். மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகள், வாரியங்கள் உள்ளிட்டவற்றில் காங்கிரஸுக்கான பங்கு குறித்தும் இப்போதே ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லது. அப்போதுதான் தமிழக காங்கிரஸாரை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த முடியும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “திமுக - காங்கிரஸ் இடையேயான உறவு என்பது மிக நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான கூட்டணி. பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்து நாங்கள் இணைந்து போராடி வருகிறோம். அந்த ஒற்றுமை இப்போதும் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், எங்களுக்கும் எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் தெளிவான இலக்குகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கூட்டணி ஆட்சி குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துகளே தவிர, அதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கூட்டணி மற்றும் அதன் முடிவுகள் குறித்து அகில இந்தியத் தலைமை மட்டுமே இறுதி முடிவெடுக்கும்” என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் கே.சி.வேணுகோபால்.
முன்னதாக நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், ‘கூட்டணிக் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் திமுக-வுக்கு எதிரான கருத்துகளை பேசி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் மல்லிகார் ஜுன கார்கேவை சந்தித்த தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட உத்தரவை மீறி பேசி வரும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்வருவோம் என்று திமுக தரப்பில் ‘செக்’ வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.