பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியது: “தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 15 தொகுதிகள் பாஜக தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 58 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி இழக்கக் காரணம், முக்குலத்தோர் அதிருப்தி, ஓபிஎஸ், தினகரன் விவகாரம் உள்ளிட்டவை தான். அதனால் இப்போதும் தெற்கில் போட்டியிட அதிமுக தயக்கம் காட்டுகிறது. அதனால், தெற்கில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்படி நாங்களே கேட்கப் போகிறோம்.
அதன்படி, கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகளும், மற்ற மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும் பாஜக-வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள்.
அதன்படி, நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோட்டில் விஜயதரணி, நாங்குநேரியில் தமிழிசை, திருச்செந்தூரில் சரத்குமார், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், சென்னை தி.நகரில் வினோஜ் பி.செல்வம், கோவை தெற்கில் வானதி சீனிவாசன், பேராவூரணியில் கருப்பு முருகானந்தம், ராசிபுரத்தில் வி.பி.துரைசாமி என முதல்கட்ட தொகுதிகளும், வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது” என்றனர்.
தங்களால் தேர்வுசெய்யப்பட்டுள்ள 50 தொகுதிகளிலும் போட்டியிட முடியாமல் போனாலும் அதிமுக தரும் தொகுதிகளை இந்த 50-க்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறதாம் பாஜக தலைமை. அதேசமயம், இந்த 50 தொகுதிகளில், அதிமுக-வின் சிட்டிங் தொகுதிகளும் இருப்பதால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தொகுதிகளைக் கைப்பற்ற கடைசி நேர இழுபறிகளும் நடக்கலாம்.