தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் டாப் 30 வாக்குறுதிகள் இவை:
> வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கிக்கொள்ள அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாக பெற்றுக்கொள்ள ‘இல்லத்தரசி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
> முதல்வரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
> ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
> இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்கப்படும்.
> அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
> முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயாகவும், காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
> நெல் கொள்முதல் விலை குவின்டாலுக்கு 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
> கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
> பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
> முதியோர் உதவித்தொகை 1,200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
> மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
> சுய உதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்களை, தொழில் முனைவோராக முன்னேற்ற பிணையின்றி 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
> பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேர் ஒன்றுக்கு, இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெற்பயிர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், நீண்டகால பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாய், மானாவரி பயிருக்கு 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
> அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
> எட்டாவது ஊதியக்குழு அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்தியதும், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்தப்படும்.
> ஒரு லட்சத்து 50 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
> உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளில் மடிக்கணினி வழங்கப்படும்.
> தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
> ஆயிரம் கிராம தெய்வ கோயில்கள் மறுசீரமைக்கப்படும்.
> 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
> சிறுபான்மையினர் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
> முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீள சாலைகள் 10 ஆயிரம் கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
> அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்.
> திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும்.
> தமிழகத்தில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
> உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
> உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் 1500 ரூபாய் மாத உதவித் தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
> புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்களும், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்களும் அமைக்கப்படும்.
> ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.
> அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் Wi-Fi வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
> தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.