பொது

பற்றி எரியும் ஈரான்... ட்ரம்ப் ‘அதிரடி’... இந்தியாவுக்கு பாதிப்பா?

செய்திப்பிரிவு

ஈ​ரானில் அரசுக்கு எதி​ரான போராட்​டங்​கள் தீவிரமடைந்து வரு​கின்​றன. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள சூழலில், ஈரான் போராட்டாத்தை முன்வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். இது, இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்​பில் ஈடு​பட்​ட​தால், அந்​நாட்​டின் மீது சர்வ​தேச தடைகள் விதிக்​கப்​பட்​டது உள்ளிட்ட காரணங்களால் ஈரானின் பொருளாதா​ரம் வீழ்ச்சியடைந்தது. அத்துடன், பொருளாதார - அரசியல் ரீதியிலான காரணங்களால் ஈரான் மதத் தலை​வர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த டிசம்​பர் 28-ம் தேதி தலைநகர் தெஹ்​ரானில் மிகப்​ பெரிய போராட்​டம் வெடித்​தது. அப்​போது தெஹ்​ரானின் முக்​கிய வணிக சந்தை​யான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன. ஜென்ஸீ இளைஞர்​கள் தலைநகரில் திரண்டு மதத் தலை​வர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலி​யுறுத்​தினர்.

கடந்த இரு வாரங்​களில் அரசுக்கு எதி​ரான போராட்​டம் ஈரான் முழு​வதும் வியாபித்து பரவி உள்​ளது. இளைஞர்​கள், வணி​கர்​கள், ஜனநாயக ஆட்​சியை விரும்​பும் அமைப்புகள், குர்​து, பலூச் இன மக்​கள் அரசுக்கு எதி​ராக சாலை, தெருக்​களில் திரண்டு போராட்​டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்​டம் வலு​வடைந்து வரு​வ​தால் ராணுவ வீரர்​கள் களமிறக்​கப்​பட்டு உள்​ளனர். பல்​வேறு இடங்​களில் போராட்​டக்​காரர்​கள் மீது துப்பாக்கிச்​சூடு நடத்​தப்​பட்டு வருகிறது.

இது குறித்து பெயர் வெளி​யிட விரும்​பாத ஈரான் மூத்த அதி​காரி ஒரு​வர் சர்​வ​தேச செய்தி நிறு​வனத்​திடம் கூறும்போது, “அரசுக்கு எதிரான போராட்​டத்​தில் ஈரான் முழு​வதும் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்துள்​ளனர்” என்று தெரி​வித்​தார். ஈரான் இன்​டர்​நேஷனல் என்ற இணைய ஊடகம் வெளி​யிட்​டுள்ள செய்தியில், “ஈரானில் கடந்த டிசம்​பர் முதல் இது​வரை 12,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். இதை அரசு தரப்பு மறைக்​கிறது. ஊடகங்​கள் முடக்​கப்​பட்டு உள்​ளன. இணைய சேவை, தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்​கிறது” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்ளது.

இந்தப் பின்னணியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் “ஈரானிய தேசப்பற்றாளர்களே... தொடர்ந்து போராடுங்கள். அரசு கட்டமைப்புகளை கைப்பற்றுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகள் வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். பதற்​றம் அதி​கரித்து வரும் சூழலில், அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்​குதல் நடத்​தக்​கூடும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதனிடையே, “ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்துக்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் எனில், அதற்கு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு, ஈரானில் உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் எனில், அதற்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி.

இப்படி உலகில் எங்கு எது நடந்தாலும் முந்திக் கொண்டு பொருளாதாரத் தடையை விதித்து, அதனால் தடை விதிக்கப்பட்ட நாட்டுக்கும் அதனுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் நாடுகளுக்கும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துவது அமெரிக்காவுக்கு புதிது இல்லை என்றாலும், ட்ரம்ப் ஆட்சியில் அதன் வீச்சு சற்றே தூக்கலாக, அதுவும் துல்லியமாக சில நாடுகளைக் குறிவைத்தும் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அந்த வகையில் ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள இந்த 25 சதவீத வரியால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகள் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளாக இருக்கும். ஈரானுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் டாப் 5 நாடுகளில் இவை உள்ளன. துருக்கி, ஐக்கிய அரபு அமீரகமும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஈரான் மீது தாக்​குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்​ளார். ஆனால், அவர் இன்​னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க இதழ்​களில் செய்தி வெளி​யானது. ஆனால், படையெடுப்புக்கு முனோட்டமாக வரி விதிப்பைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. அதுதான், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதான 25 சதவீத வரி விதிப்பு. ஈரான் - இந்தியா இடையே கடந்த 2024-25 காலக்கட்டத்தில், இந்திய மதிப்பில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடந்துள்ளது. இதில் இந்திய ஏற்றுமதி 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலானது; இறக்குமதி 3,700 கோடி ரூபாய் மதிப்பிலானது.

கடந்த 2019-க்குப் பின் ட்ரம்ப் ஈரான் மீது விதித்த பல்வேறு தடைகளின் காரணமாக இந்தியா அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொண்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதனால், 2019-ல் இந்தியா - ஈரான் வர்த்தகம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அமெரிக்க தடைக்குப் பின்னர் அது 87 சதவீதத்தில் சரிந்து, 2024-ல் 19 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ந்துள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ஈரான் - இந்தியா வர்த்தகத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

ஈரானுக்கான இந்திய ஏற்றுமதியில் பிரதானமானவை பாஸ்மதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துப் பொருட்கள், பழங்கள், தானியங்கள், இறைச்சிப் பொருட்கள் அடங்கும். இந்திய பாஸ்மதி அரிசியின் மிகப்பெரிய சந்தை ஈரான். இப்போதைய புதிய வரிகள் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை பாதிக்கும். அதேபோல் மெத்தனால், பெட்ரோலியம் பிட்டுமன், திரவ ப்ரோபேன் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள், ஆப்பிள், பேரீச்சம் போன்ற பழங்கள் ஏற்றுமதியை பாதிக்கும்.

முன்னதாக, ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்கும் நாடு​கள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஒப்புதல் வழங்​கி​னார். இப்போது ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில், ட்ரம்ப் வரி விதிப்புகளின் இலக்கு என்பது போர் நிறுத்தம், அமைதி ஏற்படுத்துதல் என்பதையும் தாண்டி தனது ஈகோவுக்குக் கட்டுப்படாத நாடுகள், குறிப்பாக இந்தியாவுக்குமானது என்பது உறுதியாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT