சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான ஆர்.பிரியதர்ஷினி மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2023-ம் ஆண்டு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். நான் எழுதிய தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல், விலங்கியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்தேன்.
ஆனால் தேர்வு முடிவு வெளியான 5 தினங்களுக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே விடைத்தாள் நகல் அளிக்கப்படும் எனக்கூறி இயற்பியல் பாடத்துக்கு மட்டும் விடைத்தாள் அளித்தனர். மற்ற பாடங்களுக்கு விடைத்தாள்கள் மறுக்கப்பட்டது. இதுபோன்ற பொதுத்தேர்வு விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கோரி பெற சட்டரீதியாக முழு உரிமை உள்ளது” என கோரியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி பிறப்பித்துள்ள உத்தரவில், “உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரி பெறும் உரிமை அனைத்து மாணவர்களுக்கும் உள்ளது.
அதன்படி அரசுத் தேர்வு இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தியோ அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி பக்கத்துக்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தியோ விடைத்தாள் நகல்களை 3 மாத காலத்துக்குள் பெறலாம். இந்த காலக்கெடுவை 6 மாதமாக நீட்டிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
எனவே மனுதாரருக்கு அவர் கோரியுள்ள விடைத்தாள் நகல்களை செலவுத்தொகை ஏதுமின்றி 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அப்போதைய பொதுத்தகவல் அலுவலரான ஜெயஸ்ரீ தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்கு ரூ.25 ஆயிரத்தை ஏன் அபராதமாக விதிக்கக்கூடாது என்பது குறித்து அவர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை மார்ச் 27 அன்று ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த மனுவை ஏற்கெனவே சரியாக விசாரித்த மேல்முறையீட்டு அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல மாணவர்கள் ரூ. 2 கட்டணத்தில் விடைத்தாள் நகல்களை 3 மாதத்துக்குள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறமுடியும் என்பதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தனது இணைய தளத்திலும் அனைவரும் அறியும்வண்ணம் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.