Regional01

ஜருகுமலை மலைவாழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அடுத்த ஜருகுமலை மற்றும் மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, சாதிச்சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக்கூறி, கடந்த 22-ம் தேதி சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் வழங்க உறுதியளித்தார். மேலும், சாதிச் சான்றிதழ் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்காததால் காலதாமதம் ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த முகாமில், சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்த ஜருகுமலை கிராமத்தைச் சார்ந்த 18 பேருக்கு கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி சாதிச் சான்றுகளை வழங்கினார்.

மேலும், தும்பல்பட்டி கிராமத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்நத 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. “மக்களிடம் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்து மலையாளி சான்றிதழ் பெற இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்” என கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார். மேலும், தும்பல்பட்டி கிராமத்தில் இடைத்தரகராகவும், பொதுமக்களை திசை திருப்பும் வகையில் செயல்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய பனமரத்துப்பட்டி இன்ஸ்பெக்டருக்கு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

          
SCROLL FOR NEXT