விளையாட்டு

‘அசாத்திய நாயகன்’ சச்சின் டெண்டுல்கர்! - பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
200 டெஸ்ட்டுகளில் 15,921 ரன்கள், 51சதங்கள், 68 அரை சதங்கள்; 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள், 49 சதங்கள், 96 அரை சதங்கள், கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சாதனைகளுடன் ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு இன்று (ஏப்.24) பிறந்தநாள்.
சச்சினின் ஓய்வு அன்று நாட்டையே உருக்கியது; தேசமே மனதால் ஒன்றுகூடி இவருக்கு விடை கொடுத்தது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியா என்ற ஒருமைப்பாட்டு உணர்வை ஒருங்கிணைக்கும் ரத்த நாளங்களில் ஒன்றாக இவருடைய பெயர் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இருந்தது.
இவர் விடைபெற்றபோது இந்திய அணியில் இருந்த ஒவ்வொருவரும் இவரைக் கனவு நாயகனாகக் கொண்டு உருவானவர்கள்.
கிரிக்கெட் ஆட்டத்தின் வரையறைகளை மாற்றி எழுதினார்.
இளம் ‘பாரத ரத்னா’ இவர். அந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரரும் இவர்தான்.
கேள்விக்கு அப்பாற்பட்டு உலகின் மரியாதையைப் பெற்றவர் சச்சின். டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், ஷேன் வார்ன் போன்ற தலைசிறந்த ஆட்டக்காரர்களால், மகத்தான ஆட்டக்காரர் எனப் பாராட்டப்பட்டவர் சச்சின்.
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன், எத்தகைய தாக்குதலையும் முனை முறிக்கும் வலிமை, மட்டை வீச்சில் மாற்றங்களைக் கொண்டுவரும் புதுமை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த சச்சினை கிரிக்கெட் உலகம் கொண்டாடுவதில் வியப்பில்லை.
கிரிக்கெட்டின் வரையறைகளை மாற்றி எழுதிய ஒரு மகத்தான சாதனையாளருக்கு இவை அத்தனையும் தகும்.
இந்திய கிரிக்கெட்டில் திறமைசாலிகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், உலகில் எல்லா அணிகளுக்கும் சவால்விடக்கூடிய, எதிரணியினரின் தூக்கத்தைக் கெடுக்கக்கூடிய திறமைசாலிகள் மிக அரிதானவர்கள். பன்முகத் திறமைகளும் அசராத போர்க்குணமும் சேர்ந்திருப்பதும் அரிது. அத்தகைய அரிய ஆட்டக்காரர்களில் முதன்மையானவர் டெண்டுல்கர்.
16-வது வயதில் களம்கண்ட சச்சின், தன் கிரிக்கெட் வாழ்வின் பெரும் பகுதியில் ஒற்றை ஆளாக நின்று போராடியிருக்கிறார். பந்து வீச்சிலோ மட்டை வீச்சிலோ துணை அதிகம் இல்லாத சூழலில், அசாத்தியமான அர்ப்பணிப்புணர்வுடன் ஒற்றைப் போராளியாகக் களத்தில் நின்றிருக்கிறார்.
பலவீனமான இந்திய அணியால் வரும் நெருக்கடி, எதிரணியின் வலுவால் எழும் நெருக்கடி, கோடிக் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு என்னும் மாபெரும் நெருக்கடி ஆகிய அனைத்தையும் சுமந்து ஆடிக்கொண்டிருந்தது அவருடைய மட்டை.
ஒரு நாயகனுக்காக ஏங்கிய தேசம், சச்சினிடத்தில் அந்த நாயகனைக் கண்டுகொண்டது. அவருடைய பங்களிப்பு, இவரைப் போல நானும் வர வேண்டும் என்னும் கனவைக் கோடிக் கணக்கானவர்கள் மனங்களில் விதைத்திருக்கிறது.
மேலும் மேலும் திறமைசாலிகள் உருவாகவும், அவர்கள் ஆட்டத்தின் வரையறைகளை மாற்றி எழுதுவதற்குமான உத்வேகத்தைத் தந்திருக்கிறது.
களத்தில் கடுமையான போராட்டங்கள், உடல் காயங்கள், உளவியல் நெருக்கடிகள், தவறிழைத்த நடுவர்கள் எனப் பல தடைகளையும் தாண்டி இறுதிவரை போராடியவர் சச்சின்.
ஒப்பற்ற திறமைகளும், அசாத்தியமான தன்னடக்கமும் இணைந்திருந்த அபூர்வக் கலவைதான் சச்சின்.
சுதந்திர இந்தியாவில் இத்தனை கோடி மக்களின் அன்புக்கும் ஆராதனைக்கும் பாத்திரமானவர்கள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவர் சச்சின்.
SCROLL FOR NEXT