PM performs darshan and puja in Shree Kalaram Mandir
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார். தொடர்ந்து ஸ்ரீராம் குண்டத்திலும் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இன்று நாசிக்கில் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ராமாயணத்தின் இதிகாசக் கதை, குறிப்பாக ராமர் அயோத்திக்குத் திரும்புவதைச் சித்தரிக்கும் ‘யுத்த காண்டம்’ பகுதியைப் கேட்டறிந்தார்.மராத்தியில் சொல்லப்பட்ட இந்தக் கதைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்தி மொழிபெயர்ப்பில் மோடி கேட்டறிந்தார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் கோயிலில் பிரார்த்தனை செய்தேன். தெய்வீக சூழ்நிலையால் நம்பமுடியாத ஆசீர்வாதமாக இதனை உணர்கிறேன்.உண்மையிலேயே இது நெகிழ்ச்சியான, ஆன்மீக அனுபவமாகும். எனது சக இந்தியர்களின் அமைதி மற்றும் நல்வாழ்விற்காக நான் பிரார்த்தனை செய்தேன்.நாசிக்கில் உள்ள ராம குண்டத்தில் நடந்த பூஜையில் பங்கேற்றேன்.ஸ்ரீ காலா ராம் கோவிலில், சந்த் ஏக்நாத் ஜி மராத்தியில் எழுதிய பவவர்த் ராமாயணத்தின் வசனங்களைக் கேட்ட ஆழமான அனுபவம் எனக்குக் கிடைத்தது. இது ஸ்ரீ ராமபிரான் அயோத்திக்கு வெற்றியுடன் திரும்பியதை அற்புதமாக விவரிக்கிறது. பக்தியுடனும், வரலாற்றுடனும் எதிரொலிக்கும் இந்தப் பாராயணம் மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.நாசிக்கில் சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினேன். காலத்தால் அழியாத அவரது எண்ணங்களும், தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.