ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மஞ்சு வாரியர் “வணக்கம். எல்லோரையும் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி. என்னை பொறுத்தவரை நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு விஷயம் இந்தப் படம்.” என்றார்.
மேலும், “சிறப்பான ஒரு கூட்டணியில் இணைந்து படம் நடிப்பது மிகப் பெரிய சந்தோஷம். ஞானவேல் இயக்கத்தில், லைகா தயாரிப்பில், ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய கதாபாத்திரம் இந்தப் படத்தில் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். உங்களைப் போல இந்தப் படத்தை பெரிய திரையில் பார்க்க நானும் மிகுந்த ஆவலாக இருக்கிறேன்” என மஞ்சுவாரியர் கூறினார்.
மனசிலாயோ பாடல் குறித்து பேசுகையில், “இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். மக்களுக்கு பிடித்த படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.” என மஞ்சுவாரியார் தெரிவித்தார்.
“இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானவேல் அப்படிப்பட்ட ஓர் இயக்குநர் தான். அவர் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது” என மஞ்சுவாரியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், “ரஜினியுடன் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன்” என்றார்.
“இந்தப் படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக் கொண்டேன். என்னை விட சீனியர் நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் நானும் இந்தப் படத்தில் இருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது” என துஷாரா தெரிவித்தார்.
‘வேட்டையன்’ படக்குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்வை ஆர்.ஜே.விஜய், திவ்ய தர்ஷினி என்ற டிடி தொகுத்து வழங்கினர்.