Gen Z Protest - How is Nepal in turmoil - Photo gallery 
ஆல்பம்

Gen Z போராட்டம்... எப்படி இருக்கிறது நிலைகுலைந்த நேபாளம்? - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

நே​பாளத்​தில் தீவிரம் அடைந்த Gen-Z தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டத்தில் அதிபர், பிரதமர், அமைச்சர்களின் மாளி​கைகளுக்கு தீ வைக்கப்பட்டது. 

ஊழல் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 

சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் நேபாளத்தில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

ஃபேஸ்​புக், யூ டியூப், எக்​ஸ், டெலிகி​ராம் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. இது, நேபாள இளம் தலை​முறை​யினரிடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​ மிகப் பெரிய போராட்டத்துக்கு வித்திட்டது. 

தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் இல்லத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 19 பேர் இறந்தனர். 400 பேர் காயம் அடைந்தனர். 

நேபாளம் முழு​வதும் வன்​முறை, கலவரம் வெடித்​தது. பல்​வேறு பகு​தி​களில் இருந்து தலைநகர் காத்​மாண்​டு​வில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்​டனர். காத்​மாண்​டு​வில் உள்ள அதிபர், பிரதமர், உள்​துறை அமைச்​சரின் மாளி​கைகளுக்கு போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். 

நாடாளு​மன்​றத்​தின் ஒரு பகு​திக்​கும் தீ வைக்​கப்​பட்​டது. தப்பியோடிய நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார்.

காத்​மாண்​டு​வில் அமைந்​துள்ள முன்​னாள் பிரதமர்​கள் பிரசண்​டா, ஷெர் பகதூர் தேவ்​பா, அமைச்​சர் பிருத்வி உட்பட மூத்த அரசி​யல் தலை​வர்​களின் வீடுகளுக்கும் போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். 

முன்​னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்​பாவை ஒரு தரப்​பினர் அடித்து உதைத்​தனர். இதில் அவர் படு​காயமடைந்​தார். நேபாள நிதித் துறை அமைச்​சர் விஷ்ணு பவு​டாலை, போராட்​டக்​காரர்​கள் காத்​மாண்​டின் பிர​தான தெரு​வில் ஓடவிட்டு அடித்து உதைத்​தனர். 

நேபாள முன்னாள் பிரதமர் சாலாநாத் கனாலின் வீடு காத்மாண்டுவில் உள்ளது. அந்த வீட்டை போராட்டக்காரர்கள்  தீ வைத்து எரித்தனர். இதில் சாலாநாத்கனாலின் மனைவி ராஜலட்சுமி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். 

நேபாள வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அர்சு ராணா தேபா (63) வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.  

போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காத சூழலில், நேபாள ராணுவம் காத்மாண்டுவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேபாள அதிபர் அதிபர் ராம் சந்திரபால் முன்வந்துள்ளார். நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல், அமைதியை கடைப்பிடித்து பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என அவர் நேபாள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்,  குடிமக்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தோடு நேபாள அரசமைப்பை முழுவதுமாக திருத்தி எழுத வேண்டும் என்று இளம் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

விரைவில், நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும்; கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஊழல் குறித்தும், அரசுடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்; சட்டவிரோத சொத்துகள் தேசிய உடைமையாக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோருகின்றனர். 

‘அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் தேவை. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீதித்துறை, பாதுகாப்பு, தொலைதொடர்பு துறைகளில் சீர்திருத்தம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நேபாள ராணுவம், நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT