Team India victory parade album 
ஆல்பம்

News in Pics: மும்பையில் ரசிகர்கள் வெள்ளத்தில் இந்திய அணி வெற்றிப் பேரணி!

Author : செய்திப்பிரிவு
ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இறுதிப்போட்டியில் 7 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பியது. டெல்லி வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பு முடிந்ததும் இந்திய வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டனர். வீரர்களின் வரவேற்பையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதியிலிருந்து வான்கடே மைதானம் வரை இந்திய அணி வீரர்கள் பேருந்தில் அணிவகுத்து, வெற்றி உலா வர இருந்த நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரசிகர்கள் பலர் பாடல், உற்சாக நடனம் என வீரர்களை வரவேற்க தயாராக இருந்தனர்.
தனி விமானத்தின் மூலம் மும்பை வந்தடைந்த இந்திய அணிக்கு விமான நிலையத்தில் ‘water salute’ அளித்து கவுரவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் வந்திறங்கியதும் ஹர்திக் பாண்டியா கோப்பையை கையில் ஏந்திய வண்ணம் வெளியே வந்தார். மும்பை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
பின்னர் அங்கிருந்து பேருந்தில் இந்திய அணி மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதிக்கு பேருந்தில் வந்தடைந்தது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வெள்ளமென ரசிகர்கள் சூழ்ந்திருந்ததனர்.
கடலையொட்டிய அந்தப் பகுதியில் வெள்ளம் வந்தது போல ரசிகர்கள் குழுமியிருந்ததால் வீரர்கள் வந்த பேருந்து மெதுவாக ஊர்ந்து நகர்ந்தது.
இதனிடையே மரைன் ட்ரைவ் பகுதியில் பலத்த மழைபெய்தது. இருப்பினும் ரசிகர்கள் பலர் மழையையும் பொருட்படுத்தாமல் வெற்றி உலாவை கொண்டாடினர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் கூட்டத்தால் அப்பகுதியே முற்றிலும் ஸ்தம்பித்தது.
தொடர்ந்து இந்திய அணி ஒருவழியாக மும்பையின் வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. மழை பெய்யும் நிலையிலும், ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
SCROLL FOR NEXT