பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை யமுனா நகரில் மழை விட்டு ஒரு வாரம் ஆகியும் வடியாத மழைநீரால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கன மழையால், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை - யமுனா நகர் பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளது.தாழ்வான இந்த நகர் பகுதியில் உள்ள 7 தெருக்களில் 700-க்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஒரு வாரமாகியும் மழைநீர் வடியாததால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.இதில், தரைதளங்களில் வசிப்போர், வீடுகளைப்பூட்டிவிட்டு உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இப்பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் மழை பெய்யும்போது, குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துவடிவதற்குப் பல மாதங்களாகின்றன.ஆகவே, மக்கள் தெர்மாகோல்படகுகள் மூலம் ஆபத்தான முறையில் வெள்ள நீரை கடந்துஅத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்குச் சென்று வருகின்றனர்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களின் பயன்பாட்டுக்காக பழவேற்காடு பகுதியிலிருந்து 5 படகுகள் வரவழைக்கப்பட்டன.அதுமட்டுமல்லாமல், ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5 ராட்சத மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி 6 நாட்களாக நடைபெற்றும், தண்ணீரை முழுமையாக அகற்ற முடியாததால், சென்னை மாநகராட்சியிலிருந்து கூடுதலாக 4 மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.மேலும், மழைநீரோடு கழிவுநீரும் கலந்துள்ளதால், நசரத்பேட்டை யமுனா நகரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.படங்கள்: ஜோதி ராமலிங்கம்