ஆல்பம்

சென்னை கனமழை பாதிப்பும், அரசின் நடவடிக்கைகளும் - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
சென்னையில் புதன்கிழமை முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இரவு கனமழை பெய்த காரணத்தால் தாழ்வான இடங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை, தாம்பரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததால், சுமார் 2 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
குறிப்பாக வேளச்சேரியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேதாஜி சாலை, என்.எஸ்.கே நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி இருப்பதால் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
“ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாவிட்டால் சென்னை இந்த அளவுக்குப் பாதுகாக்கப்பட்டிருக்காது. மழை பாதிப்பு என்பது ஓரிரு இடங்களில் இருக்கத்தான் செய்யும். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எல்லா மக்கள் பிரதிநிதிகளும் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 145 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் நீர் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அத்தியாவசியத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 2-ஆம் தேதி புயல் உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் தாமதமாக 3-ஆம் தேதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் (Cyclone Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வரும்போது 4 நாட்களுக்குக் கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
கடற்கரையில் மழைநீரை வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி உள்ளனர்.
தாம்பரம் அருகே மேடவாக்கம் பகுதியில் மோசமான சாலை மற்றும் தேங்கியிருந்த தண்ணீரால் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், தண்ணீரை வெளியேற்றி சாலையைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எண் - 9444272345, கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, தொலைபேசி எண்கள் - 044 - 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம்.
கனமழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
“கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், “மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்
படங்கள்: வேளாங்கண்ணி ராஜ், ஸ்ரீநாத், அகிலா ஈஸ்வரன், வேதன், பி.ஜோதி ராமலிங்கம், கருணாகரன், ஆர்.ரகு
SCROLL FOR NEXT