ஆல்பம்

கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி | போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. கடந்த 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் முகாம் அலுவலகத்தில் பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அதிகாரிகள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். | படங்கள்: ஜெ. மனோகரன்
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு காலை 6.50 மணிக்கு தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் தனது பாதுகாவலர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்த போது டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
ரேஸ்கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் சடலத்துக்கு பிரேதப் பரிசோதனை முடிந்தது. தொடர்ந்து அவரது சடலத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கூடுதல் டிஜிபி அருண், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அஞ்சலியை தொடர்ந்து உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில் குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஜயகுமார் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு நேரடி ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் விஜயகுமார் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். பின் சிபிசிஐடி எஸ்பியாக தனது பணியை தொடர்ந்தார்.
இந்த காலகட்டத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீட்தேர்வு முறைகேடு குறித்த விசாரணையிலும் இவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்சினையோ காரணம் இல்லை என்றும், மருத்துவக் காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் பணியாற்றி வந்தார்.
ஒருமுறை நிகழ்வு ஒன்றில்
மேலும், ஐபிஎஸ் நோக்கி பயணிக்கையில் குரூப்1 தேர்வு என்று திசைமாறி பயணித்துவிட்டேன். இதனால் என் இலக்கை அடைய தாமதாகிவிட்டது” என்று மாணவர்களூடனான உரையாடலில் விஜயகுமார் பகிர்ந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடல் கோவையில் கூடற்கூறு சோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேனி ரத்தினம்நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
டிஐஜி விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மதுரை வந்தார். இதனைத் தொடர்ந்து தேனிக்கு காரில் வந்த அவர், டிஐஜி விஜயகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கோவை மேற்கு, மதுரை தென்மண்டல ஐஜி.க்கள் சுதாகர், அஸ்ராகார்க், திண்டுக்கல், திருச்சி சரக டிஐஜி.கள் அபிநவ்குமார், சரவணசுந்தர், திண்டுக்கல், தேனி எஸ்பி.க்கள், பாஸ்கரன், பிரவீன்உமேஷ்டோங்கரோ உட்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்திய நிலையில், டிஐஜி விஜயகுமார் உடல் தகனத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. உடலை காவல் துறை அதிகாரிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றினர்.
ரத்தினம் நகரில் இருந்து கிளம்பிய ஊர்வலம் பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், பெரியகுளம், கம்பம் சாலைவழியே தேனி நகராட்சி பொது மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பொதுமக்களும், காவல் துறை அதிகாரிகள் உடன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
பின்பு தேனி நகராட்சி பொதுமயானத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் 21 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஐஜி விஜயகுமார் உடலுக்கு மகள் நந்திதா இறுதி சடங்குகளைச் செய்த பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
SCROLL FOR NEXT