திருவாரூர் மாவட்டம் - காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் கோட்டம்’ செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.திருவாரூர் அருகே அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.40 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச் செய்தவர் கருணாநிதி என்பதால், திருவாரூர், தேர் போன்ற வடிவில் இந்தக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது.இந்தக் கோட்டத்தில் கருணாநிதி திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், முத்துவேலரின் பெயரிலான நூலகம் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், இரண்டு தியேட்டர்கள் ஆகியவைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.இதைத் தவிர்த்து பாளையங்கோட்டையில் சிறையில் இருப்பது போன்ற வடிவமைப்பு, செல்ஃபி பாயின்ட், கருணாநிதி உருவ அமைப்புடன் புகைப்படம் எடுத்து கொள்ளும் வசதி ஆகியவை உள்ளன.கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “நெஞ்சில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கக் கூடிய நிலையில் உங்கள் முன்பு நான் நின்றுகொண்டிருக்கிறேன். வான்புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட, தலைவர் கருணாநிதிக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. தனது 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில், போர்பரணி பாடி வந்தாரோ, அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது” என்றார்.“அண்ணாவை தலைவர் கருணாநிதி முதன்முதலில் சந்தித்த ஊர் இந்த திருவாரூர். தலைவராக பிற்காலத்தில் ஆனவர் அல்ல, தலைவர் கருணாநிதி. தலைவராகவே பிறந்தவர்தான் அவர். அதற்கு அடித்தளமாக அமைந்த ஊர்தான் இந்த திருவாரூர். மன்னர்கள்கூட தாங்கள் ஆளும்போதுதான், கோட்டமும் கோட்டையும் கட்டுவார்கள். ஆனால், தலைவர் கருணாநிதிக்கு நிறைவுக்குப் பிறகு கோட்டம் இங்கே எழுப்பியிருக்கிறது. இன்னமும் அவர் வாழ்கிறார். ஏன் ஆள்கிறார் என்பதின் அடையாளமாகத்தான், மிக கம்பீரத்தோடு இங்கு இந்தக் கோட்டம் அமைந்திருக்கிறது” என்றார் ஸ்டாலின்.மேலும், “எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு அது திறக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்” என்று நெகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.“கலைஞர் கோட்டம் என்பது, கலைஞரின் பன்முக பரிணாமங்களைச் சொல்லக்கூடிய கருவூலம். அவரது திருவுருவச் சிலை, முத்துவேலர் நூலகம், இரண்டு அரங்குகள், இரண்டு திரையரங்குகள், பாளையங்கோட்டைச் சிறையில் இருப்பதைப் போன்ற வடிவமைப்பு, செல்ஃபி பாய்ண்ட், கலைஞருடன் படம் எடுத்துக்கொள்ளக்கூடிய வசதி, என அனைத்தும் அடங்கியதாக இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார் முதல்வர்.“திருவாரூர் தேரழகு என்பார்கள். அந்த திருவாரூர் தேர் கலைஞர் கோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக் கலையோடு நவீன வசதிகளையும் இணைத்து இந்த கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு, தலைவர் கருணாநிதி நிறைவுற்றபோது, நானும் எனது சகோதரி செல்வியும் இந்த நிலத்தை நாங்கள் விலைக்கு வாங்கினோம். அதன்பின்னர், இந்த நிலத்தில், அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் கோட்டம் அமைக்க முடிவு செய்து 4 ஆண்டுகாலம் பல சிரமங்களை மேற்கொண்டு இதை கட்டி முடித்துள்ளனர்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் கேடாக முடியும்” என்று பேசினார்.